ஜம்மு – காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து இந்திய வீரர்களை தாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக யூனியன் பிரதேச போலீஸ் டி.ஜி.பி., தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள இந்திய எல்லைப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்து மீறல் அதிகரித்துள்ளது. இன்று (ஜூன் 23) காலை புல்வாமா மாவட்டத்தின் பன்ட்சூ பகுதியில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சி.ஆர்.பி.எப்பின் 182-வது பட்டாலியனின் தலைமை கான்ஸ்டபிள் சுனில் காலே வீரமரணம் அடைந்தார். 2 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்துப்பட்டனர். ஸ்ரீநகருக்கு அருகே நடைபெற்ற மற்றொரு தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகளின் ஆயுத கிடங்குகளை போலீசார் கைப்பற்றினர்.
வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப்., வீரரின் உடலுக்கு ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி தில்பாக் சிங் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நவ்ஷெரா, ராஜோரி – பூஞ்ச் மற்றும் குப்வாரா – கெரன் ஆகிய செக்டார்கள் வழியாக அதிகமான ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை காஷ்மீருக்கு அனுப்ப பாகிஸ்தான் முயற்சிக்கிறது.
பாதுகாப்பு படையினருக்கு எதிராக புல்வாமா போன்ற தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் முழு எச்சரிக்கையுடன் உள்ளோம்” என்றார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் படையினர், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.