திருச்சிக்கு தமிழக முதல்வர் வருகிறார் என்பதற்காக திருச்சியில் உள்ள மாவட்டத்தின் நிர்வாக அதிகாரிகள் முதல் பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் வரை , கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது பிரபல தொலைக்காட்சியை சேர்ந்த பெண் நிருபர் ஒருவருக்கு காய்ச்சல் இருந்ததால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்க மறுத்தனர். இந்த நிலையில் மற்றொரு தொலைக்காட்சியின் செய்தியாளர் ஒருவர் கொரோனாவுக்கான அத்தனை அறிகுறியும் இருந்ததால் அவர் அதற்கான மாத்திரைகளை மெடிக்கலில் வாங்கி சாப்பிட்டு வீட்டிலே ஒய்வில் இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் ஒரு வாரம் கழித்து வேலைக்கு வந்தவர். அரசு மருத்துமனைக்கு சென்று தானாக முன் வந்து கொரோனா பரிசோதனை செய்திருக்கிறார். கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள் ரிசல்ட் வருகிற வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆனால் இந்த செய்தியாளர் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட பின்பு , பொது வெளிகளில் பல இடங்களில் செய்தியாளர் நண்பர்களோடு பயணம் செய்திருக்கிறார்.
இந்த நிலையில் திருச்சியில் திமுக கட்சியின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கொரோனா பரிசோதனை செய்த தொலைக்காட்சி செய்தியாளரும் கலந்து கொண்டிருக்கிறார்.
நிகழ்ச்சி முடித்து வெளியே வந்த அவருக்கு தொலைபேசியில் சுகாதார அலுவலர்கள் கொரோனா தொற்று உறுதியானது என்று சொல்லி அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் இந்த தகவல் பெரிய கலக்கத்தை உண்டாக்கியது.
பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அத்தனை பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது.