ஹைதராபாத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் கோவிட் -19 பாதிப்பால் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மருத்துவமனை படுக்கையில் இருந்து தனது தந்தைக்கு ஒரு செல்ஃபி வீடியோவை அனுப்பியுள்ளார்.
அதில் வென்டிலேட்டரை மருத்துவர்கள் நீக்கியதால் தனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த வீடியோவில் இளைஞர், “அவர்கள் வென்டிலேட்டரை அகற்றிவிட்டனர், ஆக்சிஜனை வழங்குமாறு கடந்த மூன்று மணி நேரமாக நான் கூறியதற்கு அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. என் இதயம் நின்றுவிட்டது, நுரையீரல் மட்டுமே வேலை செய்கிறது, என்னால் சுவாசிக்க முடியவில்லை, அப்பா பை அப்பா. அனைவருக்கும் பை, அப்பா” என்று கூறியுள்ளார்.
வீடியோ அனுப்பிய சில நிமிடங்களில் தனது மகன் இறந்துவிட்டதாக அவரது தந்தை கூறினார். அவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்டன. “எனது மகன் ஜூன் 24 ஆம் தேதி அன்று அதிக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். ஒரு சில மருத்துவமனைகளில் அனுமதிக்க முயன்ற பின்னர், இறுதியாக ஜூன் 24 அன்று செஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் ஜூன் 26 ஆம் தேதி அன்று இறந்தார்” என்று உயிரிழந்த இளைஞரின் தந்தை கூறியுள்ளார்.
வென்டிலேட்டர் அகற்றப்பட்டது என்ற குற்றச்சாட்டை செஸ்ட் மருத்துவமனை கண்காணிப்பாளர் மஹ்பூப் கான் மறுத்துள்ளார். வென்டிலேட்டர் பயன்பாடு அங்கு அதிகமாக இருந்தது என்றும் ஆனால் நோயாளி ஆக்ஸிஜன் விநியோகத்தை உணர முடியாத அளவுக்கு ஒரு முக்கியமான கட்டத்தில் இருந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், “திடீரென இதயம் சரியாக வேலை செய்யாத காரணத்தினால் அந்த இளைஞன் இறந்தார். கடந்த சில நாட்களில் இதுபோன்ற பல நோயாளிகளை நாங்கள் சந்தித்துள்ளோம்.
வயதான கோவிட் -19 நோயாளிகள் நுரையீரல் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். ஆனால் 25-40 வயதுடையவர்கள் இறக்கும் போது ஒரு புதிய நிகழ்வை நாங்கள் காண்கிறோம்.
அவர்களுக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது, ஆனால் அது போதுமானதாக இல்லை என்று அவர்கள் உணர்கிறார்கள்.
அந்த நபரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர். ஆனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அவர் ஆபத்தான நிலையில் இருந்தார். மருத்துவர்கள் மீது எந்த தவறும் இல்லை” என்றும் கூறினார்