தலிபான் என அழைக்கப்படும் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான நூர் வாலி மெஹ்சுத்தை உலகளவில் பயங்கரவாதியாக ஐ.நா., அறிவித்துள்ளது.
அல்-கொய்தாவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு நிதியளித்தல், சதித் திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ஐ.நா., பாதுகாப்புக் குழு, அந்த அமைப்புக்கு தடை விதித்ததுடன், அதன் தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை உலகளவில் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து அவர் வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியாது; அவரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும்.பாகிஸ்தானில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது, 2010ல் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த குண்டு வெடிப்பு, அதே ஆண்டு பெஷாவரில் அமெரிக்க துணை தூதரகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றது. தொடர்ந்து கடந்த 2011ம் ஆண்டு அல்-கொய்தாவுடன் கொண்ட தொடர்பு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக, டிடிபி அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அதன் தலைவர் நூர் வாலி தற்போது உலக பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.