திருப்பதியில் பக்தர்களுக்கு சர்வதரிசன நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் வழங்குவதை தேவஸ்தானம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
திருமலை ஏழுமலையான் தரிசனம் கரோனா பொது முடக்கத்திற்கு பின் கடந்த ஜூன் 11ம் தேதி முதல் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதலில் 6 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதை 12 ஆயிரமாக தேவஸ்தானம் உயர்த்தியுள்ளது.
இதில் 9 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமும், 3 ஆயிரம் டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள சர்வதரிசன டோக்கன் கவுண்டர்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பதியில் கொரோனா நோய்த் தொற்று பெருகி வருவதால், செவ்வாய்க்கிழமை முதல் வரும் ஆக.5ம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு மேல் கடைகள் திறக்கவும், பொது மக்கள் வெளியில் நடமாடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனவே, திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்சில் சர்வதரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்குவதை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை முதல் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மீண்டும் தரிசன டோக்கன் அளிக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க மட்டும் காவல்துறையினர் அனுமதி வழங்குகின்றனர்.
பத்மாவதி தாயார் கோயில் மூடல்
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் ஸ்ரீபாதம் தாங்கி(வாகனங்களை சுமப்பவர்) ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட நிலையில் கோயில் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டு பக்தர்களுக்கு தரிசன அனுமதி மறுக்கப்பட்டது.
கோயில் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. சுத்தப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றவுடன் இன்று(புதன்) காலை வழக்கம் போல் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.