சென்னையில் மின்விசிறியின் வேகத்தைக் குறைப்பதில் சகோதரிகளுக்குள் ஏற்பட்ட சண்டையால் 10-ம் வகுப்பு மாணவி 12-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புரசைவாக்கம் பிரிக்லின் ரோடு பகுதியில் 13 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 12-வது மாடியில் குடியிருப்பவர் அமித். இவர் தன் தம்பி குடும்பத்துடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். அமித்தின் மகள் ரூகி (15). இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
ஊரடங்கு காரணமாக ரூகி வீட்டில் இருந்துள்ளார். நேற்று மாலை ரூகி வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது மின் விசிறி வேகமாக ஓடியுள்ளது. அப்போது ரூகியின் சகோதரி மின்விசிறியின் வேகத்தைக் குறைத்துள்ளார். அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதை வீட்டிலிருந்தவர்கள் கண்டித்ததோடு சமரசப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மனவருத்தமடைந்த ரூகி, 12-வது மாடியிலிருந்து கீழே குதித்தார். ரூகியின் சத்தம் கேட்டு அங்கு வந்தனர். அப்போது தரையில் ரத்த வெள்ளத்தில் ரூகி மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்ததைப் பார்த்து, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், ரூகியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ரூகி இறந்துவிட்டதாகக் கூறினர். அதைக்கேட்டு ரூகியின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த தலைமைச் செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்தனர். ரூகியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனனக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `ரூகிக்கும் அவரின் சித்தி மகளுக்கும் மின்விசிறியால் சண்டை ஏற்பட்டுள்ளது என்று மட்டும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்றனர். ரூகியின் இந்த முடிவு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது