உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் தொழிலதிபரின் 6 வயது பேரனைக் கடத்திச் சென்ற கும்பல், ரூ.4 கோடி கேட்டு மிரட்டுவதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குட்கா தொழிலதிபர் ராஜேஷ் குமார் குப்தாவின் பேரனை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் கடத்திச் சென்றுள்ளது.
அடையாள அட்டையை கழுத்தில் மாட்டியிருந்த சிலர், கர்னால்கஞ்ச் பகுதிக்கு நேற்று வந்து பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினர்.
அப்போது அங்கே நின்றிருந்த சிறுவனை, காருக்குள் இருந்த ஒரு நபர் கையில் கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறி அழைத்துள்ளார். சிறுவன் காருக்கு அருகே நெருங்கிய போது, உள்ளே இருந்த நபர்கள் சிறுவனை இழுத்து காருக்குள் போட்டுக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.
பிறகு, அந்த சிறுவனின் குடும்பத்தினரை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்ட ஒரு பெண், ரூ.4 கோடி கொடுத்தால்தான் சிறுவனை விட முடியும் என்று மிரட்டியுள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.