மதுரை யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்த கேசவராஜா என்பவர் கடந்த ஒரு வருடமாக ஆண்டாள் கொட்டாரத்தில் நெய் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றார்.
நேற்று 3 பேர் தாங்கள் வணிக வரித்துறை அதிகாரிகள் என்று கூறி தங்களது அடையாள அட்டையை காட்டி கேசவனிடம் பணம் கேட்டு வாங்க முயற்சி செய்துள்ளனர். இந்நிலையில் கேசவராஜா தான் முறையாக இந்த தொழிலை நடத்தி வருவதால் பணம் தர முடியாது என மறுத்த நிலையில் அவரை மிரட்டியுள்ளனர்.
இதனால் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து வெளியே சென்ற அவர்களை அருகில் உள்ளவர்கள் உதவியுடன் பிடித்து தனது நிறுவனத்தில் அமர வைத்து கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து கருப்பாயூரணி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வணிக வரித்துறையில் சூப்பிரண்டாக முத்து, ( 60) அசிஸ்டன்டாக அசோகன். (60 ) இருவரும் வேலை பார்த்து ஓய்வு பெற்றது தெரியவந்தது அவர்களது அடையாள அட்டையை பயன்படுத்தி பணம் பறிக்க முயன்றுள்ளனர். இவர்களுக்கு உதவியாக அவரது நண்பர் சந்தானமும் ( 58 ) செயல்பட்டு வந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை.. போலிசார் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் ஏற்கனவே மதுரை மாநகரில் 2018 நவம்பர் மாதம் 5ஆம் தேதி மதுரையில் உள்ள பைபாஸ் சாலை ஆட்டோ மொபைல் கடையில் சுந்தர் என்பவரை மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட சுந்தர் அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் காளமேகம் அழைத்து இவர்கள் மீது எங்களுக்கு சந்தேகமாக உள்ளது என தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காளமேகம் அவரை விசாரித்தபோது போலி வருமான வரி அதிகாரி என தெரியவந்தது. உடனடியாக மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறைக்கு தகவல் கொடுத்து அவர்கள் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
பின் ஜாமினில் வெளிவந்து தொடர்ந்து இதுபோன்ற புறநகர் பகுதிகளிலும் கைவரிசை காட்டி தற்போது மாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு கடைகளில் இதுபோன்று முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தற்போது புறநகர் பகுதிகளிலும் இவ்வாறு செய்து வந்ததும் தெரியவந்தது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை