இந்தியாவில் வரும் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தனியார் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள 109 வழித்தடங்களில் 151 ரயில்களை தனியார் இயக்குவதற்கு தகுதி தேர்வுக்காக ரயில்வே வாரியம் அண்மையில் அழைப்பு விடுத்தது.
இந்நிலையில், தனியார் ரயில்களில் பயணிக்க கட்டணங்களுக்கான அதிகபட்ச வரம்பு ஏதும் நிர்ணயிக்கவில்லை என ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தகவல் கூறியுள்ளனர்.
அரசிடம் ரயில்வே சேவை இருப்பதால் ஒரே அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தனியாரிடம் சென்றால் காலநேரத்திற்கு ஏற்ப பயணக் கட்டணத்தை அதிகமாக ஏற்றலாம் என பல்வேறு தரப்பினர் புகார் கூறி வந்தனர்.
எனவே ரயில்வே சட்டத்திட்டத்தின் படி நாடாளுமன்றத்தில் அல்லது மத்திய அமைச்சரவை கூடி, தனியார் ரயில் பயணக் கட்டணத்திற்கான உச்சவரம்பை முடிவு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தனியாரிடம் ஒப்படைத்தாலும் கட்டண நிர்ணயம் என்ற முடிவு மட்டும் மத்திய அரசிடம் தான் இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்நிலையில், தனியார் ரயில்களுக்கு டிக்கெட் உச்சவரம்பு என்று எதுவும் முடிவு செய்யவில்லை, ஆனால் ரயில்வே எவ்வளவு வேண்டுமானாலும் டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கலாம் என ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவை குறித்து முடிவு எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது தனியார் ரயில் திட்டம் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அப்போதைய கால சூழல் பொறுத்து தான் கட்டணம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளது.
ஆனால், ரயில்களின் சேவை, பயணிகளுக்கான வசதி, பாதுகாப்பு உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் தனியார் ரயில்களின் வேகம், விபத்து காலத்தில் இழப்பீடு உள்ளிட்டவை குறித்தும் விதிகள் வகுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.