நிவாரணம் தேவையில்லை பிழைக்க இ பாஸ் வழங்குங்கள்; மதுரை மாவட்ட ஆட்சிரிடம் வாடகை வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை
மதுரையில் கொரோனா ஊரடங்கு தொடர்ந்து கொண்டிருக்கும் காரணத்தால் வாடகை டாக்ஸி ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரையில் தொடர்ந்து கால் டாக்ஸி நிறுவனங்கள் சார்பில் பல்வேறு பேராட்டங்கள், கோரிக்கைகள் அரசிடம் முன்வைத்த வண்ணம் உள்ளனர். ஆனால் அரசு இவர்களது கோரிக்கைக்கு சரியான தீர்வினை வழங்க இயலாமல், ஊரடங்கை நீட்டித்துக் கொண்டிருக்கிறது. எனவே, வாடகை டாக்ஸி ஓட்டுபவர்களின் வாழ்வாதாரம் சொல்ல முடியாத அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கால் டாக்ஸி நிறுவனங்கள், வாடகை வாகன நிறுவனங்கள், வாடகை கார் உரிமையாளர்கள், வாடகை கார் ஓட்டுனர்கள் சார்பில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இ பாஸ் இல்லாமல் தமிழகத்திற்குள் பயணிக்க அனுமதி வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவில் அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள்; எங்களுக்கு நிவாரணம் வேண்டாம்; பிழப்பைக் கொடுங்கள், இ பாஸ் இல்லாமல் தமிழகத்திற்குள் பயணிக்க அனுமதி கொடுங்கள், 7+1 போன்ற வாகனங்களுக்கு காலாண்டு வரி மார்ச்சில் இருந்து ரத்து செய்து காலநீடிப்பு செய்து கொடுங்கள்.
மேலும் மார்ச் மாதத்திலிருந்து வாகனங்கள் இயங்கவில்லை என்பதால் இயங்காத காலங்களிலிருந்து இன்சூரன்ஸ் நீட்டிப்பு செய்து கொடுங்கள்.
இஎம்ஐ கட்டுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பதோடு அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். வாடகை வாகனம் ஓட்டுபவர்களுக்கு டீசல் விலையில் சலுகை செய்து கொடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்கம் வாகனங்களை இயக்குவதற்கு கொடுக்கும் விதிமுறைகளை பின்பற்றுவோம். ஓட்டுநர்கள் முககவசம் அணிந்திருப்பர். வாகனத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்வோம். அரசால் அனுமதிக்கப் பட்ட வாடிக்கையாளரை மட்டுமே வாகனத்தில் பயணிக்க அனுமதிப்போம். மேலும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே வாகனத்தை இயக்குவோம் என்ற உறுதி மொழிகளும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரன்ஸ் டிராக், பெஸ்ட் டிராக், டிகே பஸ்ட் டிராக், என்டிஎல் கால் டாக்ஸி, விவி கேப்ஸ் ஆகிய கால் டாக்சி நிறுவனங்களின் ஓட்டுநர்கள் 500க்கும் மேற்பட்டவர்களின் கை எழுத்து பிரதிகளும் மனுவுடன் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளரிடம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து டாக்ஸி ஓட்டுநர்கள் கூறுகையில்… 4 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகின்ற காரணத்தால் எங்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்கி இன்னும் ஊரடங்கை நீட்டிப்பதை விட, தமிழகம் முழுக்க நாங்கள் செல்ல இ பாஸ் வழங்கினால் போதும். இனிமேலும் ஊடரங்கு தொடர்ந்தால் அதை தாங்கிக் கொள்ளும் நிலை எங்களிடம் இல்லை என்பதை உணர்ந்து எங்கள் பிழைப்புக்கு தமிழக அரசு இ பாஸ் வழங்க உடனடியாக உத்தரவு பிறபிக்க வேண்டும் என்று உருக்கமாக கேட்டுக் கொண்டனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை