கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்களுக்கு இ-பாஸ் பெற்றுத் தந்து அழைத்துச் செல்வதாக தொடர்பு எண்ணுடன் வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாட்சியர் பால சுப்ரமணியனுக்கு உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், அரவக் குறிச்சி கிராம உதவியாளர் சுப்பிரமணியனை தொடர்புடைய எண்ணுக்கு பேசவைத்து, சென்னைக்கு செல்ல எவ்வளவு ஆகும் எனக் கேட்டபோது, ரூ.2 ஆயிரத்தை அரவக்குறிச்சியில் உள்ள டி.டி. டிராவல்ஸில் செலுத்தினால் அன்று மாலையே அழைத்துச் செல்கிறோம் என்று கூறியுள்ளனர். அதன்படி, சுப்பிரமணியன் ரூ.2 ஆயிரத்தை நேற்று முன்தினம் செலுத்தியவுடன் ஒரு கார் வந்தது.
அதை வெங்கடேஷ் என்பவர் ஓட்டினார். சுப்பிரமணியன் அதில் ஏறிக்கொண்டார்.
புறப்பட்ட சிறிது நேரத்தில் ஏற்கெனவே திட்டமிட்டபடி காத்திருந்த போலீஸார் காரை நிறுத்தி விசாரித்தனர். உரிய அனுமதியின்றி, இ-பாஸ் இல்லாமல் 3 பேரை அந்தக் காரில் சென்னைக்கு ஏற்றிச் செல்ல இருந்தது தெரிய வந்ததை அடுத்து காரை பறி முதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன் பரிந்துரையின் பேரில் அரவக்குறிச்சி போலீஸார், காரின் ஓட்டுநர், டிராவல்ஸ் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.