மதுரையை 2ஆம் தலைநகராக அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வரவேற்கிறேன் என மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.
மதுரை ஒபுளா படித்துறையில் பொது மக்களுக்கு கொரானா நிவாரண உதவிகளை வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில் “சென்னை தலைநகராக இருந்தாலும் அரசியல் தலைநகராக மதுரை திகழ்கிறது. மதுரையை 2 வது தலைநகராக மாற்ற வேண்டும் என்பது எம்ஜி.ஆரின் விருப்பம்.
மதுரையை 2 ஆம் தலைநகராக மாற்றவே உலக தமிழ் சங்க மாநாடு நடத்தப்பட்டது, ஜெயலலிதா அரசியல் சார்ந்த முடிவுகளை மதுரையில் வைத்தே எடுப்பார்.
மதுரையை 2 ஆம் தலைநகராக அமைக்க முதல்வர் மற்றும் துணை முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், மதுரையை மையமாக கொண்டு வளர்ச்சி பணிகள் கொண்டு வர வேண்டும் என்பதால் 2 ஆம் தலைநகர் கோரிக்கை.
கட்சிக்குள் பேதம் இல்லை, ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது, கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி வருகிறார், கூட்டணி இப்போதைக்கு தொடருகிறது, தேர்தல் நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்.
கமல்ஹாசன் அரசியலில் எல்.கே.ஜி யில் கூட சேரவில்லை. நடிப்பில் கமல்ஹாசன் திரையுலக சக்கரவர்த்தி. நகைச்சுவைக்காக கமல்ஹாசன் பேசி வருகிறார்.
திருச்சியை 2 ஆம் தலைநகராக மாற்ற எம்.ஜி.ஆர் நடவடிக்கைகள் எடுக்கும்போது எதிர்ப்புகள் கிளம்பியதால் மதுரையை 2 ஆம் தலைநகராக மாற்ற வேண்டும் என அறிவித்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எண்ணத்தையே அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சொல்லி உள்ளார். மதுரையை 2 ஆம் தலைநகராக மாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்” என கூறினார்
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை