விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சூலக்கரை வீரப்பெருமாள் கோவில் தெருப்பகுதியை சார்ந்தவர் பேச்சிமுத்து (வயது 20). இவர் நேற்று முன்தினம் முதலாகவே மாயமாகியுள்ளார். இவரை காணாது தேடியலைந்த பெற்றோர், அவரை எங்கு தேடியும் காணாததால் அதிர்ச்சியாகியுள்ளனர்.
இதன்பின்னர், பேச்சிமுத்துவின் தந்தை சூலக்கரை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், விருதுநகரை அடுத்துள்ள மாத்தநாயக்கன்பட்டி பகுதியில் இருக்கும் கிணற்றில் இருந்து பேச்சிமுத்துவின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், பேச்சிமுத்து இணையதள விளையாட்டில் ரூ.12 ஆயிரம் தோல்வியுற்றதாக தெரியவருகிறது.
இந்த விஷயத்தை அறிந்த குடும்பத்தினர் அவரை கண்டித்த நிலையில், விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. இணையதள பண மோசடி விளையாட்டுகளை முடக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் தற்கொலைகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மேலும், தற்போது பணமோசடி விளையாட்டுகளான ஆன்லைன் ரம்மி உட்பட பல விளையாட்டுகளின் விளம்பரம் வசீகரிக்கும் நிகழ்வு போல பகிரப்பட்டு வரும் நிலையில், இதனை மக்கள் கண்டுகொள்ளாது இருப்பது நல்லது. ஒருமுறை என்ற ஆசையில் பெரும் விபரீதமும் ஏற்படலாம். இது போன்ற விளையாட்டுகளை பதிவிறக்கம் செய்து, வாழ்க்கையை இழக்க வேண்டாம்.