ரூபாய் நோட்டுக்கு அடியில் போலி ரூபாய் நோட்டுகளை வைத்து கொடுத்து ஏமாற்றிய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் ஆல்வின்ராய். லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெனிபர் (32). கோவை மாவட்டம், சூலூர், பட்டணம் பகுதியில் வசிக்கும் தனது தோழி கிருபாவின் மூலம், ஆச்சார்யா என்பவரிடமிருந்து, சொத்தின் பேரில் ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளார்.
அவரும் கடன் வழங்க ஒப்புக்கொண்டு, அவிநாசி – கோவை பைபாஸ் ரோட்டில் , பண பரிமாற்றம் செய்தனர். ஒரு கோடி ரூபாய் கடன் வழங்க ஆவண கட்டணமாக, 4 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்ட ஆச்சாரியா, முதல் தவணையாக 55 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
வீட்டிற்கு சென்று, தொகையை எடுத்து பார்க்கும் போது, ரூபாய் நோட்டுகட்டின் மேற்புறம் இருந்த, 11 ஆயிரம் ரூபாய் மட்டுமே அசல் என்பதும், மற்ற அனைத்தும் குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டு என்பதும் தெரிய வந்தது.
அதிர்ச்சியடைந்த அவர்கள், அவிநாசி போலீசில் புகார் கொடுத்துள்ளனர். சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த மோசடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.