மும்பை:
நம் நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின், சுமார் 200 பேர் வசிக்கும் குக்கிராமத்துக்கு, பாஜக., எம்.எல்.ஏ., உதவியால் மின்சாரம், பஸ் வசதி கிடைத்துள்ளதால் அந்த கிராமமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்ட எல்லைப் பகுதி கிராமம் அம்தேலி. காடுகள் சூழ்ந்த குக்கிராமமான இது மகாராஷ்டிரம் – தெலுங்கானா மாநில எல்லையில் உள்ளதால் தெலுங்கு பேசும் மக்களே அதிகம். மாவட்ட தலைநகரில் இருந்து 220 கி.மீ. தொலைவில் சிரோஞ்சா தாலுகாவில் உள்ள மலைப்பாங்கான பகுதி என்பதால் தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியல்வாதிகள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது இது. நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் மின்சாரம், போக்குவரத்து என அடிப்படை வசதிகள் இல்லாத கிராமமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜே அம்ப்ரிஷ் ராவ் அத்ரம், தனது பங்கு மாவட்ட வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 45 லட்சத்தை அம்தேலி கிராமத்துக்கு ஒதுக்கினார். இதன் பின்னர், மாநில மின்சார வாரியம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியுள்ளது. மேலும், அருகிலுள்ள நகரத்தில் இருந்து கிராமத்துக்கு போக்குவரத்து வசதியும் செய்தது.
இந்த இரு திட்டங்களை தொடங்கி வைக்க பாஜக., சட்டமன்ற உறுப்பினரான அத்ரம், பேருந்து மூலம் அம்தேலி கிராமத்துக்கு வந்தார். பூஜைகளைச் செய்த பின்னர், மின்சாரத்துக்கான சுவிட்சை ஆன் செய்து கிராம மக்களுக்கு ஒளி ஏற்றி வைத்தார். தங்கள் கிராமத்துக்கு மின்சாரம், பஸ் வசதி இரண்டும் ஒரே நேரத்தில் கிடைத்ததில், அவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.