இந்து பெண்களை இழிவாக பேசிய விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கொடும்பாவி எரித்து சர்வதேச மனித உரிமைகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சனாதன தர்ம, மனு ஸ்மிருதி என்றெல்லாம் மேற்கோளிட்டு தாம் சொல்ல விரும்பியதை ஒரு இணையவழி நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
இவ்வாறு இவர் பேசியது குறித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் எம்.பி., திருமாவளவனின் பேச்சை கண்டித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச மனித உரிமை சங்கத்தின் ஆந்திர மாநில அமைப்பு சார்பில திருமாவளவன் பேச்சை கண்டித்து அவருடைய உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் திருப்பதியில் நடைபெற்றது.
திருப்பதியில் நாலு கால் மண்டபம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் திருமாவளவனுக்கு எதிராகவும், அவருடைய பேச்சைக் கண்டிக்கும் வகையிலும் கோஷங்கள் எழுப்பப் பட்டன. தொடர்ந்து இந்த சங்கத்தின் ஆந்திர மாநில தலைவர் கிரண் மற்றும் உறுப்பினர்கள் திருமாவளவன் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.
அப்போது மிகவும் கொந்தளிப்புடன் பேசிய சர்வதேச மனித உரிமைச் சங்கத்தின் ஆந்திர மாநில தலைவர் கிரண், பெண்களை இழிவு படுத்தும் வகையில் பேசிய திருமாவளவனை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். ஜாதி, இன ரீதியாக மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இதுபோன்ற அரசியல் கட்சிகளை மத்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். திருமாவளவனை உடனடியாக கைது செய்து சட்ட ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.