மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள தேவர்சிலை அருகே முன்னாள் எம்.எல்.ஏ. மறைந்த பி.கே.மூக்கையா தேவருக்கு துணை முதல்வர் ஒ.பி.எஸ். தனது சொந்த செலவில் வென்கல சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
ஒ.பி.எஸ். சார்பில் அவரது மகனும் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஒ.பி. ரவீந்திரநாத் குமார், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், அதிமுக வழிகாட்டுக்குழு உறுப்பினரும் சோழவந்தான் எம்.எல்.ஏ.வுமான மாணிக்கம், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. நீதிபதி, மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் என்ற செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தேனி மாவட்டம், போடி தொகுதிக்குட்பட்ட எஸ். எஸ். புரம், நடுப்பட்டியில் நடைபெற்று வரும் தங்கமுத்து மாரியம்மன் திருக்கோவிலின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தினார் ஓ.பன்னீர்செல்வம்.
மேலும், தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம் சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து, சுமார் 2865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடும் நிகழ்வில் கலந்து கொண்டார்.