சட்டமன்றத் தேர்தல் தேதி கடந்த மாதம் 26ம் தேதி அறிவிக்கப் பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் தலா 3 பறக்கும்படை குழு, நிலை கண்காணிப்பு குழுக்களும், வீடியோ கண்காணிப்பு குழு என மொத்தம் 9 குழுக்கள் மூன்று பிரிவாக பணியாற்ற உள்ளனர்.
இவர்கள் ஒரு நாளைக்கு 8 மணிநேரத்திற்கு ஒரு குழு என மூன்று பிரிவாக பணியாற்ற உள்ளனர். 10 தொகுதிகளில் மொத்தம் 90 குழுக்கள் வாகன சோதனை, தேர்தல் தொடர்பான கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் தேதி அறிவித்தவுடன் பறக்கும்படை குழுக்கள் உடனடியாக வாகன சோதனையில் ஈடுபடுவார்கள்.
தற்போது தேர்தல் தேதி அறிவித்து, 3 நாட்கள் ஆகியும், நேற்று வரை பறக்கும்படை குழுக்கள் யாரும் வாகன சோதனை, கண்காணிப்பு பணியில் ஈடுபடவில்லை. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இன்று முதல் அந்தந்த குழுக்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதியில் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள்’ என்றார்.
6 தாசில்தார்கள் இடமாற்றம்
சட்டமன்றத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் 6 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் அன்பழகன் உத்தரவிட்டார்.
உசிலம்பட்டி கோட்ட கலால் அலுவலர் உதயசங்கர், மதுரை மேற்கு தாலுகா தாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் சரவணன் உசிலம்பட்டி கோட்ட கலால் அலுவலராகவும், தாசில்தார் சூரியகுமாரி வாடிப்பட்டி தாலுகா தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தாசில்தாராகவும், தாசில்தார் தமிழ்செல்வி ஆதிதிராவிடர் நிலம் எடுப்பு அலகு-2 தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் தாலுகா சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார் நாகராஜன் மதுரை கிழக்கு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட அலுவலராகவும், தாசில்தார் பிரபாகரன் கூடுதல் வரவேற்பு தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
வருவாய்த்துறையினர் போராட்டம் காரணமாக கடந்த வாரம் வரை பொறுப்பு ஏற்காமல் இருந்தனர். தேர்தல் பிரிவில் பணியாற்றும் தாசில்தார்கள் அனைவரும் உடனடியாக பொறுப்பு ஏற்றனர்.