கடந்த ஆண்டு ஊரடங்கு சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பவும், இன்னும் எண்ணற்ற நல உதவிகளையும் செய்த நடிகர் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஸ்பைஸ்ஜெட் விமானச் சேவை நிறுவனம், அவரது முகம் பதித்து நன்றி தெரிவித்துள்ளது.
கரோனா நெருக்கடி காரணமாக பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். மேலும், அத்தகைய தொழிலாளர்களுக்காகத் தனியாக வேலைவாய்ப்புத் தளம் ஒன்றையும் ஆரம்பித்தார்.
இதோடு பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார்.
சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார். மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவர் அமைத்துக் கொடுத்தார்.
சோனு சூட் செய்த நல உதவிகளைப் பாராட்டி அவருக்குப் பல்வேறு விருதுகள், கவுரவங்கள் வழங்கப்பட்டுள்ளன. தெலங்கானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் அவருக்குக் கோயிலும் கட்டப்பட்டுள்ளது. தற்போது ஸ்பைஸ்ஜெட் விமானச் சேவை நிறுவனமும் சோனு சூட்டைப் பாராட்டும் வண்ணம் தங்களது போயிங் 737 விமானத்தில் அவரது முகத்தைப் பதித்து நன்றி தெரிவித்துள்ளது.
அபாரத் திறமையாளரான சோனு சூட் நோய்த்தொற்று சமயத்தில் பல லட்ச இந்தியர்களைக் காத்துள்ளார். தங்களது குடும்பத்தினருடன் ஒன்றுசேர உதவியிருக்கிறார். அவரது மகத்தான முயற்சிகளுக்கு நன்றி சொல்ல ஏதுவான வழி இல்லையென்றாலும், அவரையும், அவர் ஆற்றிய அற்புதப் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வண்ணம் இதோ ஸ்பைஸ்ஜெட்டின் சிறிய நன்றி” என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
The phenomenally-talented @SonuSood has been a messiah to lakhs of Indians during the pandemic, helping them reunite with their loved ones, feed their families and more. (1/3) pic.twitter.com/8wYUml4tdD
— SpiceJet (@flyspicejet) March 19, 2021