வேலூரில் 33 வயது நபரை திருமணம் செய்து கொள்ளும் படி பெற்றோர் வற்புறுத்தியதால், இளம்பெண் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த புதூர் மேடு பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில், மூத்த மகளின் பெயர் கல்பனா. இவர் வேலூரில் இருக்கும் டிகேஎம் பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கு கடந்த ஒரு ஆண்டுகளாகவே திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். அதன் படி கடந்த வாரம் ஒரு மாப்பிள்ளை வந்து இவரை பார்த்து சென்றுள்ளார்.
அவருக்கு 33 வயது .பேங்க் ஒன்றில் வேலை பார்ப்பதாகவும், பெண்ணை பிடித்துவிட்டதாகவும், திருமணத்திற்கு சம்மதம் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால் கல்பனாவோ மாப்பிள்ளைக்கு வயது அதிகமாக உள்ளது. இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று கூறியுள்ளார். இருப்பினும் கல்பனாவின் பெற்றோர் இவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதனால் கல்பனா மிகுந்த வேதனையில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்றிரவு வழக்கம் போல் கல்பனா தன்னுடைய அறைக்கு தூங்க சென்றுள்ளார்.
அதன் பின் சில மணி நேரங்களில் அவரின் அறையில் இருந்த பயங்கர அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரின் அறைக்குள் சென்று பார்த்த போது, போர்வையால் உடலை மூடிக் கொண்டு தன் கழுத்தை பிளேடால் கல்பனா வெட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து கதறி கூச்சலிட்டனர்.
இந்த சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து, கல்பனாவை அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இரத்தம் ஏற்கனவே அதிகம் வெளியேறியதால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிக வயதுள்ள நபரை திருமணம் செய்து கொள்ள பெற்றோர் வற்புறுத்தியதால் பரிதாபமாக இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.