கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவி கூலிப்படையை ஏவி கணவனை கொடூர கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அடுத்த இரூர் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்து (40). இவரது மனைவி மகாலட்சுமி(35). சாலை பணியாளரான முத்து நேற்று தனது பேத்தி பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சிறுகனூர் அருகே உள்ள சி.ஆர். பாளையத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள பைந்தமிழ் தோட்டம் என்ற பகுதி அருகே சென்ற போது 2 இருசகக்ர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் முத்துவை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதை வழக்குப்பதிவு செய்த போலீசார் முத்துவை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள் என்பது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முத்துவின் மனைவி மகாலட்சுமிக்கும் சி.ஆர்.பாளையத்தை சேர்ந்த ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதற்கு முத்து இடையூறாக இருந்ததால் மகாலட்சுமியே கூலிப்படையை ஏவி முத்துவை கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தலைமறைவான மகாலட்சுமி மற்றும் கூலிப்படையை சேர்ந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.