திமுகவின் தேர்தல் அறிக்கை கள்ள நோட்டு. ஆனால் அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு. அதுதான் செல்லும். திமுகவின் தேர்தல் அறிக்கை செல்லாது என்று தேர்தல் பரப்புரையில் ஓ பன்னீர்செல்வம் கிண்டல் செய்தார்.
மதுரை ஐயர் பங்களா பகுதியில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா, மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து இன்று வாக்கு சேகரித்தார்.
அந்த பரப்புரையில் பேசிய அவர்,மூன்று முறை சட்டமன்ற தேர்தலில் வென்று சாதனை படைத்தவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். சத்துணவு திட்டத்தின் மூலமாக மக்களின் மனங்களை வென்றார். அவரது வழியில் கடந்த 2011ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் வென்றதோடு தொடர்ந்து இரண்டாவது முறையாக 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் வென்று சாதனை படைத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
அதிமுக அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் எதிர்காலத் தலைமுறையினரின் நலனை கருத்தில் கொண்டதாகும். தமிழகத்தில் வாழ்கின்ற அனைத்து குடும்பங்களில் உணவு பாதுகாப்பையும் உறுதி செய்தவர் ஜெயலலிதா. அதேபோன்று ஏழை எளிய மக்களுக்கு இதுவரை 6 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அதுபோன்ற வருகின்ற 2023-ம் ஆண்டுக்குள் வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு உறுதியான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என உறுதி அளிக்கிறோம்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது. 4 கிராமாக வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் தற்போது 8 கிராமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி திட்டங்களை நிறைவேற்ற வில்லை. இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்றார்கள். ஆனால் அவர்கள் வழங்கவில்லை. தற்போது திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு. ஆனால் அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நல்ல நோட்டாகும். அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் மிக சிறப்பான முறையில் செயல் படுத்துவோம் என உறுதி அளிக்கிறேன்.
16 லட்சம் விவசாயிகள் வாங்கிய 12,000 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளோம். அதேபோன்று கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட நகை கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளோம். சுய உதவிக்குழுவினர் பெற்றுள்ள கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தாய்மார்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள விலையில்லா வாசிங்மிசின் திட்டத்தையும் உறுதியாக செயல்படுத்துவோம். ஆண்டிற்கு 6 இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். தமிழக மக்களின் நலன் கருதி இந்த சமூக பாதுகாப்பு திட்டங்களை நாம் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
கடந்த 2006-2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது வெறும் 45 ஆயிரம் கோடிக்கு தொழிற்சாலைகளை உருவாக்கியிருந்தார்கள். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் அதிமுக அரசு 6 லட்சத்து 87 ஆயிரம் கோடிக்கு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் 19 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். அதேபோன்று விவசாயத்தில் மாணவர்களுக்கு தேவையான உரம் விதை நெல் ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு இன்று இந்தியாவிலேயே நெல் உற்பத்தியில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. அதுமட்டுமன்றி கடந்த 6 ஆண்டுகளாக அந்த முதலிடத்தை தமிழகமே தக்கவைத்துள்ளது. இதற்காக மத்திய அரசின் விருதுகளையும் தமிழக அரசு பல முறை வென்றுள்ளது.
மாணவர்களின் வளர்ச்சிக்காக 16 வகையான கல்வி உபகரணங்களை தமிழக அரசு வழங்கி அவர்களை ஊக்குவித்து வருகிறது. இதன் விளைவாக உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களின் சதவீதம் 49 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் தேசிய அளவில் இது வெறும் 24 சதவீதம் தான் என்றார்.