திருவண்ணாமலை வந்தவாசி அருகே திருமணம் செய்வதாக ஏமாற்றி குழந்தை விற்பனையில் ஈடுபட்ட காதலன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தாழப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த பவானியும், அதே பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பவரும் 7 வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பவானிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை வேறு நபரிடம் கொடுத்துவிட்டு முறைப்படி நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று சரத்குமார் பவானியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
மேலும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு உறவினருக்கு குழந்தையை கொடுப்பதாக பவானியை நம்ப வைத்து சரத்குமார் குழந்தையை எடுத்து சென்றுள்ளார்.
பின்னர் பவானியை திருமணம் செய்துக்கொள்ளாமல் கடந்த 13ம் தேதி திருப்போரூரை சேர்ந்த வேறு பெண்ணை சரத்குமார் திருமணம் செய்துள்ளார்.
இதனையறிந்த பவானி வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறை விசாரணையில் சரத்குமார் வந்தவாசி பெரிய காலனியை சேர்ந்த ஏழுமலை என்பவர் மூலம் ஜோதி, கலைவாணி, அமுல், முனியம்மாள் ஆகியோரிடம் குழந்தையை 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
அங்கிருந்து அந்த குழந்தை ஈரோடு பகுதியை சேர்ந்த நதியா, நந்தினி, ஜானகி ஆகியோரிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் சரத்குமார், வந்தவாசி ஏழுமலை, ஈரோடு பகுதியை சேர்ந்த நந்தினி, ஜானகி ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த குழந்தையை மீட்டு தாய் பவானியிடம் ஒப்படைத்தனர்.