தண்ணீர் குடிக்கும் போது, புதிதாக கட்டிய பல்லை விழுங்கிய பெண் உயிரிழந்தார். ராமாபுரம், கே.பி., நகர், பிரதான சாலையை சேர்ந்தவர் ராஜலட்சுமி, 43.
இவர், கடந்த வாரம், தனியார் பல் மருத்துவமனையில், பழைய பற்களுக்கு பதிலாக, மூன்று புதிய பற்களை கட்டி, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
மூன்று நாட்களுக்கு முன் தண்ணீர் குடித்த போது, தன்னை அறியாமல் ஒரு பல்லை விழுங்கிவிட்டார். இதையடுத்து, வாந்தி எடுத்து மயக்கமடைந்த ராஜலட்சுமி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு எக்ஸ்ரே எடுத்த போது, எதுவும் தெரியவில்லை. அதன் பின் வீட்டிற்கு வந்த ராஜலட்சுமி, நேற்று முன்தினம் மீண்டும் மயக்கமடைந்தார்.
பின், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து, ராயலா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.