தென்காசி மாவட்டம் கல்லூத்து கிராமத்தில் பொன்ராஜ் (30)- சங்கீதா என்ற மகாலட்சுமி (22) தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
இதனால் பொன்ராஜ் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மனைவியுடன் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலையில் பொன்ராஜ் வழக்கம் போல் மீண்டும் வேலைக்கு சென்று விட்டார்.
இதனால் சங்கீதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்டு திடீரென வீட்டிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சங்கீதாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டார். இதில் சங்கீதா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
வீட்டில் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை கண்ட மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து உடலை மீட்டு போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (30) என்பவருக்கும், சங்கீதாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே திருமணம் நடந்தது. திருமணம் ஆன சில மாதங்களிலேயே குடும்ப பிரச்சினை காரணமாக கண்ணனை சங்கீதா பிரிந்து சென்றுவிட்டார். பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் இருவரும் சமரசம் ஆகவில்லை.
இதற்கிடையே முறையாக விவாகரத்து பெறாமல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பொன்ராஜை சங்கீதா திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் சங்கீதாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதற்காக பைக்கிலேயே கல்லூத்துக்கு சென்ற கண்ணன், பொன்ராஜ் வீட்டில் இருந்து சென்றதும் சங்கீதாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 மாதத்தில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.