ஆந்திராவில் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைகழக விருந்தினர் மாளிகை முதலிரவுக்காக வாடகைக்கு விடப்பட்டது குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைகழகம் அமைந்துள்ளது.
பல்கலையின் விருந்தினர் மாளிகையில் உள்ள அறை ஒன்றை, அங்கு பெண்கள் அதிகாரமளித்தல் துறை தலைவராக உள்ள ஸ்வர்ணகுமாரி என்பவர் பெயரில் கடந்த ஆக.,18 மற்றும் 19ம் தேதிகளில் புதுமண தம்பதியின் முதலிரவுக்காக வாடகைக்கு எடுத்துள்ளார்.
அன்றைய தினங்களில் அந்த அறை நன்றாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அந்த அறையை, ஊழியர்கள் சிலர் அலங்காரம் செய்ததுடன் அதனை வீடியோவாக எடுத்துள்ளனர்.
அந்த அறையை பயன்படுத்திய, தம்பதியினரும் அறை அலங்காரத்தை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியதுடன். அறையை பயன்படுத்தி உள்ளனர்.
இது சமூக வலைதளங்களில் பரவ, விருந்தினர் மாளிகை அறை வாடகைக்கு விடப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் அருகில் இருந்த அறைகளிலும் யாரின் அனுமதியின்றி, தம்பதியின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களும் தங்கியிருந்தனர்
கவுரவ பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் இந்த அறை முதலிரவுக்காக வாடகைக்கு விடப்பட்டது குறித்து அறிந்த மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதனால், பல்கலையின் புனிதம் கெட்டு விட்டதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை அறித்து, இரண்டு நாட்களில் அளிக்க பல்கலை பதிவாளர் ஸ்ரீனிவாச ராவ், 5 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து உள்ளார். குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, அந்த அறிக்கை, மாநில உயர்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து ஸ்ரீனிவாசராவ் கூறுகையில், பேராசிரியரின் மாணவருக்காக அந்த அறையை, பல்கலை ஊழியர் முன்பதிவு செய்துள்ளார். ஆனால், அறையை முன்பதிவு செய்வதற்கான நோக்கம் தவறானது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார். மாநில பெண்கள் ஆணைய தலைவியும், விருந்தினர் மாளிகை அறை வாடகைக்கு விடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது