நாட்டு மக்களுக்கு 100 கோடி கோவிட் தடுப்பூசி ‘டோஸ்’களை செலுத்தி இந்தியா இன்று சாதனை படைத்துள்ளது. உலகே வியக்கும் உன்னத சாதனையாக இது பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிகழ்த்திய இந்த சாதனைக்கு உலக சுகாதார நிறுவனம் தொடங்கி பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இந்த சாதனையை நிகழ்த்துவதற்காக பாடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார துறையினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 130 கோடி பேர்களின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றியை உணர்கிறோம். இது பெரும் வரலாற்று சாதனை என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நாட்டு மக்கள் அனைவருக்கும் விரைந்து தடுப்பூசியை செலுத்தி முடிக்க வேண்டும் என்தில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
கடந்த செப்.17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளன்று நாட்டு மக்களுக்கு ஒரே நாளில் 2.5 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டது. இந்நிலையில் அக்.21 இன்று, 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடங்கி 279 நாட்களில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு விமர்சனங்களையும், இது நடக்காது என்ற ஊடகங்கள் சிலவற்றில் ஆரூடங்களையும் கடந்து பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு எடுத்த உறுதியான மற்றும் பாரபட்சமற்ற நடவடிக்கையின் மூலம் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது.
இந்த சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, 100 கோடி தடுப்பூசி சாதனையை கண்டு உலகமே வியக்கிறது என்றார். இன்று தில்லி எய்ம்ஸ் தேசிய புற்றுநோய் மையத்தில் நடந்த விழாவில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்திய வரலாற்றில் இந்நாளில் நாம் மிகப்பெரும் சாதனை படைத்துள்ளோம். இந்த சாதனையை கண்டு உலகமே வியக்கிறது. தடுப்பூசி போட்ட ஒவ்வொருவருக்கும் இந்த சாதனையில் பங்கு உண்டு. 100 கோடி தடுப்பூசி எண்ணிக்கை என்பதே அவர்களின் வெற்றி. இந்த சாதனை என்பது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தம். 100 கோடி தடுப்பூசி என்ற வலிமையான கேடயத்தை நாடு பெற்றுள்ளது. இந்த சாதனை படைக்கக் காரணமான தடுப்பூசி நிறுவன பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்களை பாராட்டுகிறேன். வலிமையான சுகாதார கட்டமைப்பை இந்தியா உருவாக்கி உள்ளது.
இன்று இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பு பலம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கு ஏதுவாக தனியார் துறை பங்களிப்பை வலுப்படுத்துவதற்கு மருத்துவக் கல்வியில் மத்திய அரசு பல சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது… என்றார்.
100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இந்தியாவுக்கும், பிரதமர் மோடி மற்றும் மக்களுக்கும் உலக சுகாதார அமைப்பு, அமெரிக்க தூதரகம், மருத்துவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரல் அத்னம் கெப்ரியேசஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், கோவிட்டில் எளிதில் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க எடுத்த முயற்சிகளுக்காகவும், தடுப்பூசி இலக்கை எட்டியதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞானிகள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இந்திய மக்களுக்கு பாராட்டுகள்… என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது டிவிட்டர் பதிவில், பிரதமர் மோடி தலைமையில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை மூலம் புதிய இந்தியாவின் ஆற்றல் உலகிற்கு மீண்டும் எடுத்து காட்டப்பட்டு உள்ளது… என்று குறிப்பிட்டுள்ளார்.