பாரதியாரின் கண்ணன் பாட்டு – பகுதி – 33
– முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன் –
கண்ணன் என் காதலன் 4
பாங்கியைத் தூது விடுத்தல்
இப்பாடலில் பாரதியாரின் பாடல் நாயகி கண்ணனிடம் பாங்கியைத் தூது விடுவதாகப் பாடியுள்ளார். இந்தப் பாட்டு நாட்டுப்புற பாடல் வகைகளில் ஒன்றான, ‘தங்கப்பாட்டு’ மெட்டில் அமைந்துள்ளது.
மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்குக்
காணிக்கை நன்மனமே குதம்பாய்
காணிக்கை நன்மனமே.
என்ற ‘குதம்பைச் சித்தர்’ பாடலைப் போல இப்பாடலிலும் ‘தங்கமே தங்கம்’ என்ற சொற்றொடர் எல்லா பத்திகளிலும் வரும். கண்ணன் மே உள்ள காதல் தொனிக்கும் வரிகள் சிருங்கார இரசத்திலும் அவன் மீது உள்ள கோபம் தொனிக்கும் வரிகள் ரௌத்ர இரசத்திலும் பாடப்படுகிறது. இனி பாடலைப் பார்க்கலாம்.
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
(அடி தங்கமே தங்கம்)
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்;
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம் – பின்னர்
ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம். 1
கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் – நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்;
அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம் – என்னும்
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம். 2
சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே – எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம்;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கின்றான்? – அவை
யாவும் தெளிவுபெறக் கோட்டு விடடீ!. 3
மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் – தலை
மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ?
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே – கிழப்
பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம். 4
ஆற்றங் கரையதனில் முன்னமொருநாள் – எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்
தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே
சொல்லி வருவையடி தங்கமே தங்கம். 5
சோர மிழைத்திடையர் பெண்களுடனே – அவன்
சூழ்ச்சித் திறமை பல காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ! 6
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் – மிகப்
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்;
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் – அதைப்
பற்றி மறக்கு தில்லை பஞ்சை யுள்ளமே. 7
நேர முழுவதிலுமப் பாவி தன்னையே – உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்,
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால் – பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம்! 8
கண்ணன் மன நிலை என்னவென அறிந்து வரவேண்டும் எனத் தோழியிடம் நாயகி சொல்வதாகப் பாடல் தொடங்குகிறது. அதன் பின்னர் கண்ணனிடம் சொல்ல வேண்டிய செய்திகள் என்னவென்பதை வரிசைப்படுத்திப் பாடல் கூறுகிறது. கண்ணன் தன்னைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால் சின உணர்ச்சி (ரௌத்ரம்) மேலிடுகிறது. ரௌத்ர இரசம் மேலிட எழுதுவது பாரதியாருக்குக் கைவந்த கலை.
ஆலயம் அழித்தலும், அருமறை பழித்தலும்,
பாலரை, விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்
மாதர் கற்பழித்தலும் மறையவர் வேள்விக்
கேதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார்
சாத்திரத் தொகுதியைத் தழல்படுக்கின்றார்
கோத்திர மங்கையர் குலங் கெடுக்கின்றார்
எண்ணில, துணைவர்காள், எமக்கிவர் செயுந் துயர்
கண்ணியம் மறுத்தனர், ஆண்மையுங் கடிந்தனர்,
பொருளினைச் சிதைத்தனர், மருளினை விதைத்தனர்
திண்மையை அழித்து பெண்மையிங் களித்தனர்
பாரதப் பெரும்பெயர் பழிப் பெயராக்கினர்
சூரர் தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர்
என அவர் சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது என்ற பாடலில் எழுதியுள்ளது இன்றும் நாம் படிக்கையில் (வேறு காரணங்களுக்காக) நம் நரம்புகளில் வீரத்தை ஊட்டுகிறது.
பாரதியாரின் நாயகி இப்பாடலில் தனது பாங்கியை கண்ணனிடம் தூதுவிடுகிறாள். காதல் இலக்கியத்தில் தூது ஓர் முக்கியமான பகுதியாகும். அந்த மரபை ஒட்டி பாரதியார் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார். பாடலின் விளக்கத்தை நாளை காணலாம்.