மதுரையில் விதிமீறல் கட்டிடங்களுக்கு அபராதம் வசூலிக்கப் படுவது குறித்து மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் விதி மீறல் உள்ள இனங்களில் சொத்துவரி விதிப்பு செய்யும் பொழுது ஒரு சதுர அடிக்கு 50 பைசா வீதம் அபராதத் தொகை கணக்கிட்டு வசூல் செய்ய வேண்டும் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப் பட்டு அதன் அடிப்படையில் சொத்துவரி உடன் சேர்த்து அபராதத் தொகை வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இதனை தற்போது வணிக கட்டிடங்களுக்கு மட்டும் ஒரு சதுர அடிக்கு ரூ.1- என உயர்த்தி அபராதம் விதிக்கவும், பிற கட்டிடங்களுக்கு ஏற்கனவே உள்ள அபராதத் தொகை ஒரு சதுர அடிக்கு 50 பைசா என்ற நிலையையே தொடரவும்,
மேற்கண்ட அபராதத் தொகையை புதிதாக கட்டப்படும் வணிக கட்டிடங்களுக்கு 01.10.2021 முதலும், ஏற்கனவே உள்ள அனுமதி பெறாத மற்றும் விதிகளுக்கு மாறாக கட்டப்பட்டுள்ள வணிக கட்டிடங்களுக்கு 01.04.2022 முதலும் ரூ.1- வீதம் அபராதம் விதிக்கப்படும் என ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், தெரிவித்துள்ளார்.