இந்தியா நியூசிலாந்து இரண்டாம் டெஸ்ட் முதல் நாள்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இன்று இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் மும்பையில் தொடங்கியது. அரபிக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் மும்பையில் நேற்று மழை பெய்தது.
டிசம்பர் மாதத்தில் மும்பையில் மழை பெய்வது மிகவும் அபூர்வம். இந்த மழையின் காராணமாக ஆடுகளம் ஈரமாக இருந்ததால் இன்றைய ஆட்டம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.
இருப்பினும் மாலை வரை 70 ஓவர்கள் வரை மேட்ச் நடந்தது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் ரஹானே, இஷாந்த் ஷர்மா, ஜதேஜா ஆகியோருக்குப் பதிலாக கோலி, சிராஜ், ஜயந்த் யாதவ் ஆகியோர் ஆடினார். ரஹானே, இஷாந்த், ஜதேஜா ஆகிய மூவரும் காயம் காரணமாக ஆடவில்லை எனக் கூறப்பட்டது.
நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் ஆடவில்லை. அவருக்குப் பதிலாக டேரில் மிட்சல் விளையாடினார். அணித்தலைவர் பொறுப்பை டாம் லாதம் பார்த்துக் கொண்டார். பூவா தலையா வென்ற கோலி முதலில் மட்டையாட முடிவு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில், மயங்க் அகர்வால் இருவரும் அவர்களது பணியைச் சிறப்பாகச் செய்தனர். தான் சந்தித்த முதல் ஆறு பந்துகளில் கில் மூன்று ஃபோர்கள் அடித்து ஆட்டத்தைத் தொடங்கினார்.
முதல் விக்கட்டுக்கு இருவரும் 80 ரன் சேர்த்தனர். அப்போது மும்பையில் பிறந்த நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் பந்து வீச வந்தார். 28ஆவது ஓவரில் கில்லை அவர் கிரீஸுக்கு வெளியே வந்து ஆடும்படி செய்து பந்தைத் தவறவிடச் செய்தார். அடுத்த பந்தில் கில் ரோஸ் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த அஜாஸ் படேல் ஓவரில் புஜாராவும் கோலியும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்கள்.
விளையாட்டில் இதெல்லாம் சகஜம் என்றாலும் புஜாரா, கோலி போன்ற டெஸ்ட் மேட்ச் வல்லுநர்கள் ஒரு சுழல் பந்துவீச்சாளரிடம் முதல் ஓவரிலேயே ஆட்டமிழப்பது அவர்களது தேர்வை கேள்விக்குறியாக்குகிறது. அதன் பிறகு ஆடவந்த ஷ்ரேயாஸ் ஐயர் 17 ஓவர்கள் ஆடினார். 41 பந்துகளில் 18 ரன் எடுத்து அஜாஸிடம் ஆட்டமிழந்தார்.
ஷ்ரேயாஸ் ஆட்டமிழந்ததும் ஆட வந்த விருத்திமான் சாஹா ஆட்டமிழக்காமல் 22 ஓவர்கள் ஆடியிருக்கிறார்; 25 ரன் எடுத்திருக்கிறார். மயங்க் அகர்வால் தொடக்கம் முதல் ஆடி, 246 பந்துகளைச் சந்தித்து 120 ரன்கள் எடுத்து இன்னமும் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.
நியூசிலாந்து அணியில் அஜாஸ் படேல் 29 ஓவர்கள் வீசி 10 மெய்டன், 73 ரன்கள் கொடுத்து நாலு விக்கட் எடுத்துள்ளார். முதல் நாள் ஆட்டம் இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.