ஐபிஎல் 2022
ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
– K.V. பாலசுப்பிரமணியன் –
புனே கிரிக்கட் மைதானத்தில் ஐந்தாவது ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று விளையாடின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸ் ராஜஸ்தான் அணியை மட்டையாடச் சொன்னார்.
ஆனால் அந்த அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. அந்த அணியின் ஜாஸ் பட்லர் (35 ரன், 28 பந்துகள், 3 ஃபோர், 3 சிக்சர்), மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் (20 ரன், 16 பந்துகள்), சஞ்சு சாம்சன் (55 ரன், 27 பந்துகள், 3 ஃபோர், 5 சிக்சர்), தேவதத் படிக்கல் (41 ரன், 29 பந்துகள், 4 ஃபோர், 2 சிக்சர்), ஹெட்மையர் (32 ரன், 13 பந்துகள், 2 ஃபோர், 3 சிக்சர்) என ரன்களைக் குவித்தனர்.
20 ஓவர் முடிவில் அந்த அணி ஆறு விக்கட் இழப்பிற்கு 210 ரன் எடுத்திருந்தது. சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் ரன்கள் தொடர்ந்து போவதைத் தடுக்க முடியாமல் திணறினார்கள். அடுத்து விளையாடவந்த சன்ரைசர்ஸ் அணியின் விக்கட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக விழுந்தன.
இரண்டாவது ஓவரில் கேன் வில்லியம்சன்; நாலாவது ஓவரில் ராகுல் திரிபாதி; ஐந்தாவது ஓவரில் நிக்கோலஸ் பூரன்; ஒன்பதாவது ஓவரில் அபிஷேக் ஷர்மா; பத்தாவது ஓவரில் அப்துல் சமது என விக்கட்டுகள் மடமடவென விழுந்தன.
எய்டன் மெர்க்ரம் (57 ரன்), ஷெப்பர்ட் (24 ரன்), வாஷிங்க்டன் சுந்தர் (40 ரன்) மூவரும் எடுத்த மொத்த ரன்கள் 121. அணியின் மொத்த ஸ்கோர் ஏழு விக்கட் இழப்பிற்கு 149.
இவ்வாறாக சன்ரைசர்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய அணி வெற்றி பெற்றிருக்கிறது என்பது சிறப்புச் செய்தி.