பில்லூர் அணையிலிருந்து வெளியேற்றும் தண்ணீர் பவானி ஆற்றில், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக பவானிசாகர் அணைக்கு செல்கிறது.
ஆற்றின் இரு பக்கமும் பலர் மின் மோட்டார்களை வைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதுதொடர்பான புகார்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு சென்றதை அடுத்து, ஆற்றின் கரையோரம் ஆய்வு செய்யும்படி கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ் ஆலோசனையின் பேரில், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில், மேட்டுப்பாளையம் தாசில்தார் ரமேஷ், பொதுப்பணித் துறையினர், வனத்துறையினர் ஆகியோர் அடங்கிய குழு தேக்கம்பட்டி அருகே பவானி ஆற்றின் கரையோரம் ஆய்வு செய்தது.
அப்போது அனுமதி இல்லாமல் மின் மோட்டார்கள் வைத்து பவானி ஆற்றின் நீரை வணிக மற்றும் இதர பயன்பாட்டுக்கு எடுத்து சிலர் பயன்படுத்துவது தெரியவந்தது.
இதையடுத்து, அரசிடம் முறையாக அனுமதி எதுவும் பெறாமல், ஆற்றில் நீர் எடுப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்து சென்றனர்.