தமிழகத்தில் கவர்னருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தமிழக கவர்னர் சென்ற கார் மீது மயிலாடுதுறையில் இன்று கல்வீசி தாக்கி உள்ளார்கள். மாநிலத்தில் கவர்னருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும். தினமும் கொலை, பாலியல் வன்முறைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக கெட்டுவிட்டது.
ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணை கட்டிக்கொண்டு தனது கட்சி சித்தாந்தத்தோடு மத்திய அரசை எதிர்ப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளார். கவர்னர் மீது தி.மு.க. தொண்டர்கள் எதேச்சையாக தாக்குதல் நடத்தவில்லை. தலைவர்களின் தூண்டுதலின் பேரிலேயே தாக்குதல் நடந்துள்ளது.
கவர்னருக்கு உயிருக்கு ஆபத்து என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. முதல்-அமைச்சர் இன்று மாலைக்குள் கவர்னரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்.
அநாகரீகமாக நடத்தப்படும் இந்த தாக்குதல்களை எதிர்த்து கலவரத்தை உருவாக்குவதற்கு பா.ஜனதா விரும்பவில்லை. கவர்னரின் பாதுகாப்பில் எந்த சமரசத்துக்கும் இடம் கிடையாது. அது தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு இன்று கடிதம் எழுதப்போகிறோம். உடனடியாக உள்துறை அமைச்சகம் தலையிட வேண்டும். டி.ஜி.பி. உயர் அதிகாரிகளிம் விளக்கம் கேட்க வேண்டும்.
இசைஞானி இளையராஜா யாரோ ஒரு மூன்றாவது மனிதர் எழுதிய புத்தகத்துக்கு தனது சொந்த கருத்தை முன்னுரையாக எழுதி இருக்கிறார். இதற்கு ஏன் கோபம் அடைய வேண்டும். அவரது இசை உலகம் உலகைவிட பெரியது. பதவிக்காக என்று குறுகிய வட்டத்துக்குள் அடக்க முடியுமா? அவருக்கு பதவி என்றால் உச்சபட்சமாக பாரத ரத்னா விருது கொடுப்பதாகத்தான் இருக்கும்.
என அவர் கூறியுள்ளார்.
![தமிழகத்தில் கவர்னருக்கே பாதுகாப்பு இல்லை-அண்ணாமலை 1 images 65 2](https://dhinasari.com/wp-content/uploads/2022/04/images-65-2.jpeg)