-K.V. பாலசுப்பிரமணியன் –
2022ஆம் ஆண்டிற்கான தாமஸ் கோப்பை (ஆண்கள் பேட்மிண்டன்), உபர் கோப்பை (பெண்கள் கோப்பை) தாய்லாந்தில் பாங்காக்கில் நடைபெறுகிறது. இதில் ஆண்கள் அணி அரையிறுதியில் டென்மார்க் அணியை வென்று இறுதிப்போட்டியில் நுழைந்து சாதனை செய்துள்ளது.
இந்திய ஆண்கள் அணியில் ஒற்றையர் ஆட்டத்தில் ஆடும் வீரர்கள் – லக்ஷ்யா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹெச்.எஸ். பிரணாய், பிரியான்ஷு ரஜாவத்; இறட்டையர் அணி வீரர்கள் – சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி இணை, எம்.ஆர். அர்ஜுன், துருவ் கபிலா இணை, கிருஷ்ணபிரசாத் கார்கா, விஷ்ணுவர்தன் கௌட் பஞ்சாலா இணை.
உபர் கோப்பைக்காக ஆடுகின்ற வீராங்கனைகள்; ஒற்றையர் அணி – பி.வி. சிந்து, ஆகார்ஷி கஷ்யப், அஷ்மிதா சாலிஹா, உன்னடி ஹூடா; இரட்டையர் அணி – தெரசா ஜாலி, சிம்ரன் சிங்கி, ரிதிகா தாக்கர், தனிஷா, ஷ்ருதி மிஸ்ரா. பெண்கள் அணி காலிறுதி ஆட்டத்தில் தாலாந்து அணியிடம் தோற்றுப்போனது.
தாமஸ் கோப்பை போட்டிகளில் இந்திய அணி குரூப் ‘சி’ பிரிவில் சைனீஸ் தாய்பேய் (தைவான்), ஜெர்மனி, கனடா அணிகளுடன் இருந்தது. குரூப் ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்களில் வென்று அடுத்தகட்டமான ‘நாகவுட்’ கட்டத்திற்கு முன்னேறியது. இது காலிறுதிப் போட்டியாகும். இதில் மலேசியாவுடன் மோதி வெற்றிபெற்றது. பின்னர் அரையிறுதியில் டென்மார்க்குடன் மோதி வெற்றிபெற்று, நாளை (15.05.2022) இந்தனேசியாவுடன் மோத உள்ளது.
இந்திய அணி இதுவரை மூன்று முறை அரையிறுதிப் போட்டி வரை வந்துள்ளது. கடைசியாக 1979ஆம் ஆண்டு அரையிறுதிப்போட்டியில் விளையாடியது. இப்போதுதான் முதல் முறையாக இறுதிப்போட்டியில் விளையாடுகிறது.
அரையிறுதிப் போட்டியில் முதல் ஒற்றையர் ஆட்டத்தில் லக்ஷ்யா சென் 13-21, 13-21 என்ற கணக்கில் விக்டர் ஆக்செல்சனிடம் தோற்றார். முதல் இரட்டையர் ஆட்டத்தில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி/சிராக் ஷெட்டி ஜோடி 21-18, 21-23, 22-20 என்ற கணக்கில் கிம் அஸ்ட்ரப்/மத்தியாஸ் கிறிஸ்டியன்சனுக்கு எதிராக வெற்றி பெற்றது.
இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-18, 12-21, 21-15 ஆண்டர்ஸ் ஆண்டன்சனுக்கு எதிராக வென்றார். இரண்டாவது இரட்டையர் ஆட்டத்தில் கிருஷ்ண பிரசாத் கரகா/விஷ்ணுவர்தன் கவுட் பஞ்சாலா 14-21, 13-21 என்ற செட் கணக்கில் ஆண்டர்ஸ் ஸ்காரூப் ராஸ்முசென்/ஃபிரடெரிக் சோகார்டிடம் தோற்றனர்.
மூன்றாவது ஒற்றையர்: எச் எஸ் பிரணாய் 13-21, 21-9, 21-12 என்ற கணக்கில் ராஸ்மஸ் கெம்கேவுக்கு எதிராக வென்றார். நாளை மாலை இந்திய நேரப்படி 1830 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறும். இந்திய அணி வெற்றிபெற வாழ்த்துவோம்.