கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் சித்திரை தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடிக்க இன்று கோலாகலமாக நடைபெற்றது.
108 வைணவ திவ்ய தேசங்களில் 3வது தலமாகவும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு நாலாயிரம் திவ்ய பிரபந்தம் ஏற்றப்பட்ட தலமாக விளங்குவது கும்பகோணம் சாரங்கபாணி கோயில்.
இந்த கோவிலில் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய சித்திரை தேரோட்ட விழா இன்று துவங்கி நடைபெற்றது.
தமிழ்நாட்டில் 3வது பெரிய தேரில் சந்தனகாப்பு அலங்காரத்துடன் ராஜ அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சம்மிதராய் சாரங்கபாணி பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதிக்க, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
தேரோட்டதை முன்னிட்டு பாதுகாப்பு நலன் கருதி ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேரோடும் சாலையின் குறுக்கே செல்லும் கேபிள் இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தது





