ஐ.பி.எல் முதல் தகுதிச்சுற்றுப் போட்டி
24, மே, 2022 குஜராத் vs ராஜஸ்தான்
-K.V. பாலசுப்பிரமணியன்
முதல் தகுதிச்சுற்றுப் போட்டி இன்று கொல்கொத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதனை முதல் க்வாலிஃபையர் என ஆங்கிலத்தில் அழைப்பர்.
ஐபிஎல்லில் சாதராண அரையிறுதி ஆட்டமுறை கடைபிடிக்கப்படவில்லை. சாதாரண முறையில் முதலாமிடத்தில் உள்ள அணி நான்காம் இடத்தில் உள்ள அணியோடு மோதும். இரண்டு, மூன்றாம் இடத்து அணிகள் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் மோதும். இரண்டிலும் வெற்றிபெற்றவர்கள் இறுதிப்போட்டியில் மோதுவார்கள்.
ஐபிஎல் முறை அப்படியல்ல. முதல், இரண்டாம் இட அணிகள் முதல் க்வாலிஃபையர் போட்டியில் மோதுவார்கள். அதில் வெல்பவர்கள் இறுதிப்போட்டிக்கு நேரடியாகச் செல்வார்கள். மூன்றாம், நான்காம் இட அணிகள் அடுத்த போட்டியில் மோதுவார்கள். இதில் தோற்கும் அணி போட்டியிலிருந்து வெளியேற்றப்படும். இந்தப் போட்டியை எலிமினேட்டர் போட்டி என்பார்கள்.
வெற்றிபெற்ற அணி, முதல் க்வாலிஃபையர் போட்டியில் தோற்ற அணியிடம் விளையாடும். இதனை இரண்டாம் க்வாலிஃபையர் என்பார்கள். இதில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்குச் செல்லும். அவ்வகையில் இன்று கொல்கொத்தாவில் நடந்த, முதல் க்வாலிஃபையர் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலில் இருந்த குஜ்ராத் அணியும் இரண்டாமிடத்தில் இருந்த ராஜஸ்தான் அணியும் விளையாடின.
டாஸ் வென்ற குஜராத் அணி ராஜஸ்தான் அணியை முதலில் மட்டையாடச் சொன்னது. தொடக்க வீரர் யஷஸ்வீ ஜெய்ஸ்வால் மூன்று ரன்னிற்கு இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவருடைய இடத்தில் ஆடவந்த சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார். அவர், மூன்று சிக்சர், ஐந்து ஃபோருடன், 26 பந்துகளில் 47 ரன் எடுத்து 9.5 ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் 19.5 ஓவர் வரை விளையாடி 56 பந்துகளில் 89 ரன் எடுத்தார்.
20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி ஆறு விக்கட் இழப்பிற்கு 188 ரன் எடுத்தது.
பின்னர் ஆட வந்த குஜராத் அணியில் விருத்திமான் சாஹா முதல் ஓவர் இரண்டாவது பந்தில் அவுட்டானார். அதன் பின்னர் ஷுப்மன் கில் (21 பந்துகளில் 35 ரன்), மேத்யூ வேட் (30 பந்துகளில் 35 ரன்), ஹர்திக் பாண்ட்யா (27 பந்துகளில் 40 ரன்), டேவிட் மில்லர் (38 பந்துகளில் 68 ரன்) எடுத்து அனிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
பாண்ட்யாவும் மில்லரும் இறுதி 10 ஓவர்களில் 106 ரன் எடுத்தனர். முதலில் பாண்ட்யா அதிரடியாக ஆட, மில்லர் பொறுமை காத்தார்; பின்னர் மில்லர் அதிரடியாக ஆட பாண்ட்யா பொறுமைகாத்தார். ரஷீத்கான் சிறப்பாக முன்னர் குஜராத் அணிக்காக பந்து வீசினார்.
நாளை லக்னோ, பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி கொல்கொத்தாவில் நடைபெறுகிறது.