அரக்கோணம் அருகே, கந்து வட்டி பிரச்சனையால் கணவன்,மனைவியை கந்து வட்டி கும்பல்.
அடித்துக்கொலை செய்து ஏரிக்கால்வாயில் வீசி விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கைலாசபுரம் ஏரிக்கால்வாய் ஓரத்தில் இன்று ஆண், பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அரக்கோணம் தாலுகா போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், காஞ்சிபுரம் மாவட்டம், அரசன் தாங்கல் பகுதியை சேர்ந்தவர்கள் மாணிக்கம்(51), அவரது மனைவி ராணி(47) இருவரும் நெசவுத் தொழிலாளர்கள். மகள் சசிகலாவுக்கு திருமணமாகிவிட்டது.இவர் தந்தை வீட்டில் தங்கியிருந்து தனியார் கல்லுாரியில் செவிலியர் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
மகன் பெருமாள் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாமாண்டு வெல்டர் படித்து வருகிறார். குடும்ப வறுமை காரணமாக மாணிக்கம், காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கந்து வட்டி கும்பலிடம் 2 லட்சம் ரூபாயை கடந்தாண்டு கடனாக வாங்கியுள்ளார். அசலையும், வட்டியையும் கட்டாததால், கந்து வட்டி கும்பலை சேர்ந்தவர்கள் நேற்று மாலை மாணிக்கம், ராணியை காரில் கடத்திச் சென்று அடித்துக் கொலை செய்து, கைலாசபுரம் ஏரிகால்வாய் ஓரம் வீசி விட்டு சென்றது தெரியவந்தது. அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட ராணி அரக்கோணம் வன்னியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் மற்றும் மின்னல் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த மின்னலான் என்பவரின் சகோதரி ஆவார். இதுகுறித்து பேசிய ராணியின் சகோதரர், தங்கையின் குடும்பத்தினர் கடன் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். கடன் கொடுத்த நிதி நிறுவனத்தினர் அவர்களை தொல்லை செய்து வந்ததாகவும் தற்போது இருவரும் கொடூரமான முறையில் கொலைசெய்ய ப்பட்டுள்ளதாக கூறினார்.




