பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, ஊடகவியலாளர்களை அவமரியாதை செய்துவிட்டதாக, ஓரிரு பத்திரிகையாளர் சங்கங்கள் அறிக்கைகள் வெளியிட்ட நிலையில், சக பத்திரிகை நண்பர்கள், கட்சி ரீதியான பாரபட்சத்தைக் கடந்து, நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று, தேசிய ஊடகவியலாளர் நலச் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைமை இடமான கமலாலயத்தில் நேற்று (27 மே 2022) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பதிலளித்துக் கொண்டிருந்த சமயத்தில் நமது ஊடக நண்பர்கள் சிலர் தொடர்ந்து கேள்விகள் கேட்ட விதம் அவர்கள் அரசியல் சார்புடையவர்களோ என சந்தேகிக்க வைத்தது. பாஜக மாநிலத் தலைவரின் விளக்கத்திற்குப் பிறகும் அந்த ஊடக நண்பர் மீண்டும் மீண்டும் கேட்ட கேள்விகள் ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களின் நடுநிலையை கேள்விக்குறி ஆக்கியது.
பொதுவாக பத்திரிகையாளர் சந்திப்பில் யார் கேள்வி கேட்கிறார்கள் என்பது கேட்டவருக்கும், உடன் இருக்கும் ஊடக நண்பர்களுக்கும், பதில் அளிக்க வேண்டிய அரசியல் பிரமுகருக்கும் மட்டுமே தெரியும். சமீப காலமாக தேசியவாத எண்ணம் கொண்ட அரசியல் பிரமுகர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மட்டும் சில ஊடக நண்பர்கள் குழப்பம் விளைவிக்கும் விதமாக, தேசியவாதிகளை வெறுப்பேற்றும் விதமாகவே கேள்வி கேட்கிறார்கள். அந்த நேரங்களில் தேசியவாத அரசியல் பிரமுகர்களது பதில் ஒட்டுமொத்த ஊடகத்தையும் குறிக்கும் விதமாக அமைந்து விடுவது நமக்கு வருத்தம் தருகிறது. அதற்கு நமது சக ஊடகவியலாளர்களே காரணமாக அமைவது துரதிஷ்டவசமானது.
மிகவும் பொறுப்பு மிக்க ஊடகவியலாளர்கள் ஆகிய நாம் எந்தக் கட்சியின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பாக இருந்தாலும், அரசியல் பிரமுகர் இடதுசாரி, வலதுசாரியாக இருந்தாலும் நடுநிலை தவறாமல் பாரபட்சமின்றி அதே நேரத்தில் நாகரிகமாகவும் நடந்து இருக்கிறோம், அப்படியே தொடர்ந்து நடந்திட வேண்டும் என்பதை சக ஊடகவியலாளர்களுக்கு நமது தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் பணிவுடன் அறிவுறுத்த விரும்புகிறது… என்று குறிப்பிடப் பட்டிருந்தது.