![புளியந்தோப்பு ‘ராமராஜ்ய’ ஆய்வாளர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக... இந்து முன்னணி அறிக்கை! 1 hindumunnani](https://dhinasari.com/wp-content/uploads/2022/11/hindumunnani-1024x576.jpg)
காவல்துறையை களங்கப்படுத்தி முடக்க சதி நடக்கிறதா? ஒருதலைப்பட்சமாக அரசு செயல்பட்டால் அரசு நிர்வாகம் சீர்குலைந்து போகும் என்று, மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
புளியந்தோப்பு காவல்துறை ஆய்வாளர் திரு. ராஜேந்திரன், இங்கு இருப்பது ராமராஜ்யம் இதனை ஏற்காதவர்கள் அவர்களுக்கு ஏற்ற நாடுகளுக்கு செல்லலாம் என பேசியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஒரு தந்திரம்தான் என்பது ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாட்சப் போன்ற குழுக்களில் இருக்கும்போது யாரையாவது பழிவாங்க வேண்டுமென்றால் வேற்று மதத்தினர் இது போல ஒரு பதிவை இட்டு தூண்டிலில் யார் சிக்குவார்கள் என்று பார்ப்பார்கள். இது அனைத்து துறைகளிலும் நடந்து வருகிறது.
இந்த ஆய்வாளர் விஷயத்தில் இவரை மாட்ட வைத்தது கிறிஸ்டோபர் என்ற மற்றொரு காவல்துறையைச் சேர்ந்த நபர் என்று தெரிகிறது. கிறிஸ்டோபரை கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் அவரைச் சார்ந்த மதம் இன்று ஆட்சி நடக்க பெரிதும் உதவுகிறது என்பதை இந்த ஆட்சியின் சபாநாயகர், அமைச்சர்கள் ஏன் முதல் அமைச்சரும் கூட வரிந்து கட்டி பேசுகிறார்கள்.
தனிப்பட்ட கருத்து பதிவிடுவது நன்னடத்தை விதிகளுக்கு முரணானது என்றால் அவ்வாறு செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருதலைப்பட்சமாக அரசு செயல்பட்டால் அரசு நிர்வாகம் சீர்குலைந்து போகும் என்பதை ஆட்சியில் இருப்பவர்கள் உணர வேண்டும்.
இது ஆபத்தான விளையாட்டு. கிறித்துவ மதவெறி, இஸ்லாமிய மதவெறியை சிறிதும் தயக்கமின்றி அரசு அதிகாரிகள் வெளிப்படுத்தும் போது அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. அதற்கு பதிலடி கொடுத்தால் அதன் மீது தான் நடவடிக்கை என்றால் அது சட்டப்படியும் தர்மப்படியும் தவறாகும்.
சில மாதங்களுக்கு முன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஹிஜாப் அணிந்து டாக்டர் சீருடை அணியாமல் சிகிச்சை அளிக்காமல் அமர்ந்து இருந்த டாக்டரிடம் கேள்வி கேட்டவர் மீது காவல்துறை வழக்கு தொடர்ந்தது. அந்த டாக்டர் இஸ்லாமிய அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்து அதனை மதப்பிரச்சனையாக ஏற்படுத்தினார். சுகாதார துறை அமைச்சர் இது குறித்து மூச்சு கூட விடவில்லை. அதுபோல கலெக்டராக இருந்த உமாசங்கர் கிறித்துவ மூடநம்பிக்கையை உயர்த்தி பிடித்து மதப்பிரச்சாரம் செய்தார்.
இது போன்ற பல சம்பவங்களில் அரசு பாரபட்சமாக நடந்து கொண்டதை பட்டியல் இட முடியும்.
அரசியல், மத காழ்ப்புணர்ச்சி காவல்துறையில் ஏற்பட இந்த திராவிட அரசியல் ஆட்சியே காரணம். இதனால் நடுநிலையாக, நல்ல எண்ணத்தில் செயல்பட்டு வரும் அதிகாரிகள் குறிவைத்து புண்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.
என்னதான் அதிகாரியாக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தான். யதார்த்தமாக பேசுகின்ற பேச்சை விபரீதமாக ஆக்கும் உள்நோக்கத்தில் அதை பதிவு செய்து பொது வீதியில் வெளிப்படுத்துவது அநாகரிகமான செயல். அதன் மீது அரசு நடவடிக்கை எடுப்பது என்பது அந்த சதிகளை ஊக்கப்படுத்துவது போலவும் அதற்கு உடந்தையாக செயல்படுவதாகவும் அமைந்துவிடும் என எச்சரிக்கிறோம்.
எனவே தமிழக அரசு தொடர்ந்து பாரபட்சமாக செயல்படுவதை கைவிட்டு நேர்மையாக நடுநிலையாக செயலாற்ற முன்வருவதே தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் நல்லது.
அரசாங்க பெரிய பொறுப்புகளில் தொடர்ந்து சிறுபான்மையினர் அதிக அளவில் நியமிக்கபடுவது அரசின் செயல்பாடுகள் பற்றி மக்களுக்கு சந்தேகம் எழுவதற்கு காரணமாக அமைகிறது. இது திட்டமிட்டு செய்யப்படுகிறதோ என எண்ணத் தோன்றுகின்றது.
மேலும் காவல்துறையில் பணியாற்றுபவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது என்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
எனவே காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் உடனே தலையிட்டு சரிசெய்ய ஆவண செய்ய இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்