11. பூரி ஜெகன்னாதர் கோவில்
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
நாங்கள் காரில்தான் பயணித்தோம் என்றாலும் காலை 0630 மணியிலிருந்து பல்வேறு இடங்களுக்குப் போய்க் கொண்டிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து லிங்கராஜா கோயில். கோயிலில் ஒரு மணி நேரம் செலவு செய்தோம். பின்னர் தொஹிலி செல்ல ஒரு 20 நிமிடம். அங்கு 0945 வரை சாந்தி ஸ்தூபி மற்றும் அசோகரின் கல்வெட்டுகளைப் பார்வையிட்டோம்.
பின்னர் காலைச் சிற்றுண்டி அருந்திய பின்னர் கொனார்க் நோக்கிப் புறப்பட்டோம். கொனார்க் வந்தடையும்போது சுமார் பன்னிரண்டரை மணி ஆகிவிட்டது. அந்த நேரத்திலும் கொனார்க் கோயிலைப் பார்த்துவிட்டு, ஆளுக்கு ஒரு இளநீர் பருகிய பின்னர் பூரி நோக்கிப் பயணமானோம். பூரி வரும்போது மூன்று மணி ஆகிவிட்டது. நேரடியாக ஜெகன்னாதர் கோவிலுக்குச் சென்றுவிட்டு பின்னர் கடற்கரைக்குச் சென்றோம்.
பூரி ஜெகன்னாதர் கோயிலுக்குச் செல்லுபோது நாங்கள் மிகவும் சோர்வாக இருந்தோம். கோயிலுக்குச் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் நாங்கள் வந்த கார் நின்றுவிட்டது. அங்கிருந்து கோயிலுக்கு நடந்து செல்ல வேண்டும் என்று சொன்னார்கள். நடக்க முடியாதவர்கள் செல்ல கோயிலுக்குச் சொந்தமான ஒரு பேட்டரி கார் இருந்தது. அந்த நேரத்தில் கூட்டம் குறைவாக இருந்ததால் விரைவாகப் பார்த்துவிட்டு வந்துவிட்டோம்.
ஜெகன்னாதர் கோயில் என்பது விஷ்ணுவின் வடிவமான ஜகன்னாதர்-ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முக்கியமான இந்துக் கோயில். அவந்தியின் மன்னன் இந்திரத்யும்னன் பூரியில் ஜெகநாதரின் பிரதான கோயிலைக் கட்டினான். தற்போதைய கோயில் பத்தாம் நூற்றாண்டில் மீண்டும் கட்டப்பட்டது. கிழக்கு கங்க வம்சத்தின் முதல் அரசரான அனந்தவர்மன் சோடகங்காவால் கோயில் கட்டுமானம் தொடங்கப்பட்டது. கோயிலைப் பற்றி பல வதந்திகள் பரப்பப்படுகின்றன ஆனால் அதற்கு உறுதியான ஆதாரம் இல்லை. இக்கோயில் வைஷ்ணவ பாரம்பரியத்தின் 108 திவ்ய க்ஷேத்திரங்களில் ஒன்றாகும்.
பூரி கோயில் அதன் வருடாந்திர ரத யாத்திரை அல்லது தேர் திருவிழாவிற்கு பிரபலமானது, இதில் மூன்று முக்கிய தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்ட கோயில் ரதங்களில் இழுக்கப்படுகின்றன. பில் சவர் பழங்குடி பூசாரிகள் மற்றும் ஜகந்நாதத்தில் உள்ள பிற சமூகங்களின் பூசாரிகளால் வழிபாடு செய்யப்படுகிறது. கோவில். பெரும்பாலான இந்துக் கோயில்களில் காணப்படும் கல் மற்றும் உலோகச் சிலைகளைப் போலல்லாமல், ஜகன்னாதரின் சிலை மரத்தால் ஆனது மற்றும் ஒவ்வொரு பன்னிரெண்டு அல்லது 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது மீண்டும் செய்யப்படுகிறது.
இந்த கோவில் அனைத்து இந்துக்களுக்கும் குறிப்பாக வைணவ மரபுகளில் புனிதமானது. இராமானுஜாச்சாரியார், மத்வாச்சாரியார், நிம்பர்காச்சாரியார், வல்லபாச்சாரியார் மற்றும் இராமானந்தா போன்ற பல பெரிய வைஷ்ணவத் துறவிகள் கோயிலுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். இராமானுஜர் கோயிலுக்கு அருகில் எமர் மடத்தையும், ஆதி சங்கராச்சாரியார் நான்கு சங்கர மடங்களில் ஒன்றான கோவர்தன் மடத்தையும் நிறுவினார்.
ஜகன்னாதர், பலதேவர் மற்றும் சுபத்ரா ஆகிய மூன்று தெய்வங்களும் கோயிலில் வழிபடப்படுகின்றன. கோயிலின் உள் கருவறையில் சுதர்சன சக்ரா, மதன்மோகன், ஸ்ரீதேவி மற்றும் விஸ்வதாத்ரி ஆகிய தெய்வங்களுடன், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் இந்தத் தெய்வங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. புனிதமான வேம்பு மரக்கட்டைகளால் செதுக்கப்பட்ட இத்தெய்வங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கட்டமைப்பு
பிரமாண்டமான கோயில் வளாகம் 4,00,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும் இது உயரமான கோட்டைச் சுவரால் சூழப்பட்டுள்ளது. இந்த 20 அடி உயரமுள்ள சுவர் மேகநாதா பச்சேரி என்று அழைக்கப்படுகிறது. குர்ம பேதா என்று அழைக்கப்படும் மற்றொரு மதில் பிரதான கோயிலைச் சுற்றி உள்ளது. இது குறைந்தது 120 கோவில்களைக் கொண்டுள்ளது. கோயிலில் நான்கு தனித்தனி பிரிவு கட்டமைப்புகள் உள்ளன, அவையாவன: (1) தேயுலா, விமானம் அல்லது கர்ப க்ரஹம். ரத்னபீடத்தில் (முத்து சிம்மாசனம்) வீற்றிருக்கின்ற மூன்று தெய்வங்கள். (2) முகஷாலா எனப்படும் முன் தாழ்வாரம், (3) நாத மந்திர் எனப்படும் நாதமண்டபம், (4) போக மண்டபம் எனப்படும் பிரசாத மண்டபம்.
பூரி ஜெகநாதர் கோவில் அதிசயங்கள்
ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு அதிசயம் மற்றும் மர்மங்கள் அடங்கி இருக்கும். அந்த வகையில் பூரி ஆலயத்தில் ஒரு தனி சிறப்பு இருக்கிறது.
கருவறை விக்ரக மர்மம்
உலகிலேயே மூலவரின் சிலை மரத்தாலான ஒரே கோயில் இதுதான் இந்த ஆலயத்தில் ஜெகநாதர் (Jagannath), பலதேவர், சுபத்திரா தேவி (கிருஷ்ணர், பலராமர் மற்றும் சுபத்திரை) ஆகியோர் ஒரே கருவறையில் இருந்து அருள் பாலிக்கின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூலவரின் சிலை உரிய சடங்குகளுடன் அதே மரத்தினால் மறு உருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
முழுமையடையா கடவுள் சிலைகள்
இக்கோவிலின் மூலவர் சிலைகள் முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் முழுமையடையாமல் இருக்கின்றன.
எதிராக பறக்கும் கொடி
இந்தக் கோவில் கோபுரத்தில் அமைந்துள்ள சுதர்சன சக்கரம் நகரின் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் நம்மை பார்ப்பது போலவே காட்சியளிக்கும். அதேபோல் அந்த சக்கரத்தின் மேலே ஒரு கொடி பறந்து கொண்டு இருக்கும் இது சாதாரண கொடி அல்ல ஏனென்றால் இந்த கொடியானது காற்றில் எந்த பக்கம் வீசுகிறதோ அதற்கு எதிர் திசையில் பறக்கும்
பொதுவாக காலையில் இருந்து மாலை வரையிலான நேரங்களில் காற்று கடலிலிருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிரே நடக்கும்
கோபுரத்தின் நிழல்
இந்த கோவில் கோபுரத்தின் நிழல் ஒருபோதும் கீழே விழுவதில்லை சூரியன் சுட்டெரித்தாலும் கோபுரத்தின் நிழலை பார்க்க முடியாது. இந்த கோவிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகள் பறப்பதில்லை.
சமைக்கும் உணவின் அதிசயம்
இந்த கோவிலில் சமைக்கப்படும் பிரசாதத்தின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாக இருக்கும் ஆனால் பக்தர்களின் எண்ணிக்கை கூடினாலும் குறைந்தாலும் தயாராகும் பிரசாதம் ஒருபோதும் பக்தர்களுக்கு பற்றாமல் போனதில்லை அதுபோல மீதாமும் ஆவதில்லை.
மடப்பள்ளியில் இன்றுவரை விரகு அடுப்பு வைத்து மண்பானைகளை கொண்டுதான் சமைக்கிறார்கள் இந்த மண் பானைகளை ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு அடுக்குகள் வைத்து சமையல் செய்யப்படுகிறது. அப்படி சமைக்கும் போது அடியில்லுள்ள பானையின் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்துவிடும் அதிசயம் நடக்கிறது .
கடற்கரை ஒட்டி ஜெகன்நாதர் இருந்தாலும் சிங்க வாசலின் முதல் படியில் கோவிலின் உட்புறமாக காலெடுத்துவைத்து உள்நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது. ஆனால் அதே சிங்கத்துவாராவின் முதல் படியில் கோவிலின் வெளிப் புறமாக நுழையும் பொழுது கடலிலிருந்து வரும் சப்தம் நமக்கு கேட்கும் இதையும் மாலை நேரங்களில் தெளிவாக உணரமுடியும்.
அவசரப்படாமல் கோவிலைச் சுற்றிப் பார்க்க குறைந்தது மூன்று மணி நேரமாவது ஆகும். ஆயினும் மக்கள் கூட்டம், பாதுகாவலர் கெடுபிடி, நமக்குள்ள நேரம் ஆகியவற்றால் நம்மால் மூல்வர்களை மட்டுமே பார்க்க இயலும்.
கோயிலைச் சுற்றிப் பார்த்த பின்னர், நாங்கள் பூரியின் கடற்கரைக்குச் சென்றோம். மெரினா கடற்கரையைப் பார்த்தவர்களுக்கு எந்த ஒரு கடற்கரையும் அழகாகத் தெரியாது. பின்னர் ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினோம். இரவும் நல்ல உணவு சாப்பிட்டோம். அடுத்த நாள் சில்கா ஏரிக்குப் போவதாக திட்டமிட்டோம்.