தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், பழங்குடியின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி திமுக தொடர்ந்த வழக்கை அடுத்து, அறிவிப்பாணையை ரத்துசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையமும், உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி திமுக-வும் மனுக்களை தாக்கல் செய்தன.
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அதுவரை உள்ளாட்சி நிர்வாகிகளை நிர்வாகிக்க தனி அதிகாரிகளை நியமிக்கவும் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உள்ளாட்சி தேர்தல் நடத்த என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு எனவும் தெரிவித்தது.
மேலும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அட்டவணையை ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதோடு, அன்றைய தினத்துக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது. அட்டவணையை தாக்கல் செய்யாவிடில் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாக நேரிடும் எனவும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.