சென்னை: இனி ஆன்லைனிலேயே இ அடங்கல் பெறலாம். ஆன்லைனில் சிட்டா மற்றும் பட்டா பெறுவது எளிமையாக்கப்பட்டது போல, அடங்கல் பெறுவதற்கான நடைமுறையும் எளிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது.
விவசாயிகள் அரசு மானியம், பயிர்க்கடன், மானிய விலை யில் உரம் பெறுதல், பயிர்க் காப்பீடு பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்கும், நிலஅளவையின் போதும் தங்களின் விளை நிலத்துக்கான பட்டா, சிட்டா ஆகியவற்றை அளிப்பது கட்டாயத் தேவையாக உள்ளது. இவை தற்போது இ-சேவை மையம் மூலமாகவே எளிதில் வழங்கப்படுகிறது.
தற்போது அடங்கலும் அதிகாரிகளால் சரிபார்ப்புக்கு அடிக்கடி கேட்கப்படுகிறது. ஆனால், இ-சேவை மையம் மூலமாக அடங்கல் வழங்கப்படுவதில்லை. இதனை விண்ணப்பித்து 15 முதல் 30 நாட்களுக்குள் அடங்கல் வழங்கப்படுகிறது. இவற்றை ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ பெற்று சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. இதனால் தமிழக அரசு இந்த சேவையையும் இ-சேவை மையம் மூலமாக, எளிதாக வழங்க முடிவு செய்துள்ளது. இந்தப் பணிக்காக, தனியாக ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
அடங்கல் வழங்குவது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்த போது, விவசாயிகளின் விளை நிலங்களுக்கு வி.ஏ.ஓ.,க்கள் நேரடியாகச் சென்று அடங்கல் விவரத்தை பதிவு செய்யலாம். விவசாயிகளும் தங்கள் சாகுபடி விவரங்களை ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யலாம் இரு பதிவுகளையும் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வேளாண் அலுவலர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளிப்பர்.
இதன் பின்னர், விவசாயிகள் இ- சேவை மையங்களில் அடங்கலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பயிர் சாகுபடி அடிக்கடி மாறும் என்பதால் ஒவ்வொரு மாதமும் 23ஆம் தேதிக்குள் ‘அடங்கல்’ விவரத்தை ஆன்லைன் மூலமாக பதிவு செய்துவிட வேண்டும். பயிர்க் காப்பீடு, வங்கிக் கடன், விவசாய நகைக் கடன், மானியம் வழங்குவது உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் ஆன்லைன் மூலமாகவே அடங்கல் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். விவசாயிகளுக்கு உதவும் இந்தத் திட்டம் விரைவில் அறிமுகப்ப டுத்தப்படவுள்ளது என்றனர்.