மத்தியில் மீண்டும் பாஜக தலைமையில்தான் ஆட்சி அமையும். அப்படி நடந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்! அவரது இந்தக் கருத்துக்கு மாநில பாஜக தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அண்மையில் ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. அம்மாநில முதல்வரான அசோக் கெலாட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கெலாட், “வரும் மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோல்வியை தழுவுவது உறுதி. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீ்ண்டும் ஆட்சிக்கு வந்தால் வியப்பு அடைவதற்கில்லை” என்றார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த துணை முதல்வர் சச்சின் பைலட், கெலாட் தவறாகக் கூறியதாக அவரிடம் காதைக் கடித்தார். பின்னர் வேறு வழியின்றி தாம் தவறாகக் கூறிவிட்டதாக சிரித்துக் கொண்டே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வியை தழுவும் என்று கூறி சமாளித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள பாஜக.,வினர், எப்போதும் முதலில் உண்மையைப் பேசும் அசோக் கெலாட்டுக்கு நன்றி என்று கூறியுள்ளனர்.