பிப்.1 இன்று தாக்கல் செய்யப் பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துகள் இங்கே…
நிதிநிலைச் சமன்பாடு பாதிக்கப்படாமல் தாக்கல் செய்யப் பட்டிருக்கும், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் பாராட்டிற் குரியது. சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வருமானத்தை உறுதி செய்யும் மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். மீனவர்களின் நலன் காக்க, தனியாக மீன்வளத் துறை ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத் தக்கது! தேசிய கல்வி இயக்கம், சமூக நலத் திட்டங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், சுகாதாரம் போன்ற பல துறைத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் உயர்த்தப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்.
– தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி.
மத்திய பட்ஜெட் மக்களை ஆசை வார்த்தை கூறி, திசை திருப்பும் தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சில அறிவிப்புகள், உள்நோக்கம் நிறைந்ததாக அமைந்துள்ளன. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த அவசர நடவடிக்கை எடுப்போம் என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. கலால் வரியாக ரூ.18 லட்சம் கோடி வசூலித்து, பெட்ரோல், டீசல் விலையை மத்திய பா.ஜ., அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. பா.ஜ., அரசு ஏதோ திடீரென கனவு கண்டு எழுந்ததுபோல அறிக்கை தாக்கல் செய்துள்ளது. உண்மையில் இந்த அறிக்கை பிரதமர் மோடிக்கு கொடுங்கனவாகவே இருக்கப் போகிறது.
– மு.க.ஸ்டாலின்
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, சென்னை தூத்துக்குடி சரக்கு தொடர் வண்டிப் பாதை போன்ற எதிர்பார்க்கப்பட்ட திட்டங்களுக்கு அறிவிப்பு கூட இல்லை
– மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட பட்ஜெட்டாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி மேற்கொண்ட பட்ஜெட்டாக அமைந்துள்ளது
– த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்
இந்திய மக்களுக்கு பொய்மாலை எனும் மத்திய பட்ஜெட் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது
– திருநாவுக்கரசர்
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஆண்டு வருமானவரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது, நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டதன் அறிவிப்பாக பட்ஜெட்டை எடுத்துக்கொள்ளலாம்
– பாரிவேந்தர், ஐஜேகே
வருமானவரி விலக்கு உள்ளிட்ட ஒரு சிலவற்றைத் தவிர வாக்குகளை வாங்குவதற்காக வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, காகிதப் பூமாலையாக மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது.
– டிடிவி தினகரன்