டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது … உச்சநீதிமன்றம் தீர்ப்பு! #TTVDhinakaran#Breaking#SupremeCourt
டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், அ.ம.மு.க., துணை பொதுச் செயலர் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டி யிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், அடுத்து வரும் தேர்தல்களிலும் அமமுக., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடும்படி உச்ச நீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் அளிக்கப் பட்ட பதில் மனுவில், அமமுக., தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல. அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு ஒரு பொதுச் சின்னத்தை ஒதுக்க முடியாது. பொதுப் பட்டியலில் உள்ள சின்னத்தை ஒரு தனிப்பட்ட கட்சி உரிமை கோர முடியாது. பொதுப் பட்டியலில் உள்ள சின்னத்தையும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வழங்குவது நடைமுறை இல்லை… என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அக்கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கலாம்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தொடர்ந்த வழக்கை 4 வாரத்திற்குள் தில்லி உயர் நீதிமன்றம் முடிக்க வேண்டும். 4 வார காலத்துக்குள் நீதிமன்றம் முடிவெடுக்காவிட்டால், தேர்தல் ஆணையம் முடிவு செய்யலாம் என்று கூறியது.