காவல் உயர் அதிகாரிகளுடன், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இன்று மாலை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், காவல்துறை டிஜிபி, தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப் படலாம் என்ற சூழலில், பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான வியூகம், எங்கு துணை ராணுவம் தேவை, பிரசாரத்திற்கு செல்லும் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பளித்தல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், நாளை துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இதை அடுத்து, அரசு நிர்வாக ரீதியாகவும், மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்து தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதனால் விரைவில் தேர்தல் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.