லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும். உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன்-சுந்தர் அடங்கிய அமர்வு கருத்து. தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்; லஞ்சம் வாங்குவோர் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றனர் நீதிபதிகள்.
லஞ்சம் வாங்கு தூக்கிலிட வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் கூறினர்.
மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர் நியமனத்துக்கான எழுத்துத் தேர்வுக்கான கேள்வித் தாள் கசிந்தது தொடர்பாக மதுரை சூர்யாநகரை சேர்ந்த பழனிபாரதி என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவை விசாரித்த் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர், இந்த மனுவைப் படித்து கோபம் அடைந்தனர். தொடர்ந்து, வேகமாக சில கருத்துகளையும் உணர்ச்சி வேகத்தில் தெரிவித்தனர்.
இது குறித்து நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள்… லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கென கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் லஞ்சம் வாங்குவோர் சொத்துக்களை முடக்க வேண்டும்.
கடுமையான சட்டம் வந்தால்தான் லஞ்சம் வாங்குவது இயல்பான விஷயம் என்பது மாறும். லஞ்சம் வாங்குபவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். லஞ்சம் வாங்குவோரை தூக்கிலிடலாம். அப்போது தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும்.. என்றனர்.
இந்தக் கருத்துக்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக உலா வருகின்றனர்.
தமிழக மக்கள் தொகையில் பாதியை காலி செய்ய நீதிபதிகள் ஆலோசனை தருகின்றனர் என்று சிலர் கூற, நாளையே நீதிபதிகள் லஞ்சம் கொடுப்பவர்களையும் தூக்கில் இடலாம் என்று ஒரு உத்தரவு போட்டாலும் போடலாம் என்று கருத்து கூறினர். எனவே அறநெறி பாழ்பட்ட தமிழகத்தை முற்றிலும் ஒழித்துக் கட்ட நீதிபதிகள் தரும் நல்ல யோசனை இது என்று சிலர் ஆதரவாக கருத்து கூறியுள்ளனர்.


