பாஜக., வேட்பாளர் பட்டியலை ஹெச்.ராஜா வெளியிட்டிருக்கக் கூடாது என்று தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும், வரும் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று கூறினார்.
மேலும் அவர், பாஜக வேட்பாளர் பட்டியலை ஹெச்.ராஜா வெளியிட்டிருக்க கூடாது என்று கண்டிப்புடன் கூறினார்.
முன்னதாக ஹெச்.ராஜா நேற்று சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, அதிகாரபூர்வமற்ற வேட்பாளர் பட்டியல் என்று ஐந்து தொகுதிகளுக்கான பாஜக., வேட்பாளர்கள் குறித்து கூறினார்.
இந்நிலையில், இதற்கு அதிருப்தி தெரிவித்து, `கட்சிக்குத் தலைவர் நானா, அவரா? என்று தமிழிசை கேட்டதாக செய்திகள் வெளியாயின. ஹெச்.ராஜாவின் செயலால் கோபமடைந்த தமிழிசை, “கட்சிக்குத் தலைவர் நானா இல்லை அவரா தன்னிச்சையா அறிவிக்குறதுக்கா மேலிடப் பார்வையாளர், தேர்தல் பொறுப்பாளர், கட்சித் தலைவர்னு இத்தனை பேரு இருக்கோம்’’ என கொதித்ததாகக் கூறப்படுகிறது.