ஜம்மு காஷ்மீரில் பணி நேரத்தில் ஜாலியாக சுற்றி திரியும் அரசு அலுவலர்களை பிடிக்க நூதன முறை கையாளப் படுகிறது.
ஜம்மு & காஷ்மீரில் கிஸ்த்வார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் சரியாக வேலை செய்வதில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து பணி நேரத்தில் ஊழியர்கள் சிலர் வெளியில் சுற்றித் திரிகிறார்கள் என்றும், அங்குள்ள மார்க்கெட்களுக்குச் சென்று வருவதும், மார்க்கெட் பகுதியில் சென்று தங்களது சொந்த வர்த்தகப் பணிகளில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.
இதை அடுத்து அரசு அலுவலர்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 78 அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அலுவலகத்தில் இல்லாமல் வெளியில் இருந்தது தெரிய வந்தது. இதனால், அவர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இது நடந்து 10 நாட்களில் மற்றொரு நடவடிக்கையை அரசு நிர்வாகம் மேற்கொண்டது. அதன்படி சந்தை பகுதிகள், தேநீர்க் கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் வீடியோ பதிவு மேற்கொள்ள கிஸ்த்வார் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. பணிநேரத்தில் ஜாலியாக சுற்றி திரியும் அரசு ஊழியர்களை ஆதாரத்துடன் பிடிக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேபோன்று வீடியோ கண்காணிப்புக் குழுக்களை அமைக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது. இவர்கள் அரசு ஊழியர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன், அவர்கல்ளை வீடியோவில் பதிவு செய்து, மேலதிகாரிகளுக்குக் கொடுப்பார்கள்.
இதை அடுத்து வீடியோவில் உள்ள அரசு ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப் பட்டுள்ளது.