-ஆர். நடராஜன்
ஹிந்து பத்திரிகை குடும்பத்தைச் சேர்ந்த மாலினி பார்த்தசாரதி உலகப் பெருந்தலைவர்களையெல்லாம் நேர்காணல் செய்திருக்கிறார். நீண்ட நேர்காணல்கள் ஹிந்துவில் வெளியாகியிருக்கின்றன. அவர் சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்திருக்கிறார். அதைப் பற்றி டிவிட்டரில் அருமையான தெளிவு தரக்கூடிய சந்திப்பு என்று எழுதியிருக்கிறார்.
பொதுவாக ‘ஹிந்து பத்திரிகை’ ஹிந்துக்களுக்கு எதிரானது என்ற எண்ணம் வாசகர்களிடையே உண்டு. காரணம் பிஜேபி அல்லது ஹிந்துத்வாவை முன்னிறுத்தும் சக்திகளை ஒதுக்கினால் பரவாயில்லை. கடுமையாக விமர்சித்து வந்திருக்கிறது ஹிந்து பத்திரிகை.
ஒரு முறை ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த வைத்தியாவின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு தனிப்பட்ட முறையில் சென்றிருந்தேன். அப்போது ஹிந்துவில் இருந்தேன். ஆனால் நிருபராக இல்லை, உதவி ஆசிரியராக. ஹிந்துவில் இருந்து வேறு யாரும் அந்த பத்திரிகைக் கூட்டத்திற்கு வராததனால் நான் அந்தக் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். “ஏன் சென்றாய்?” என்றுதான் என்னைக் கேட்டார்கள்.
இது இப்படியிருக்க இன்றைய சூழ்நிலையில் மாலினி பார்த்தசாரதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது சிந்தாந்த ரீதியாக இல்லாமலும் இருக்கலாம். முரண்படும் பத்திரிகையாளர் ஒரு பெரிய தலைவரை சந்திக்கக்கூடாது என்று சட்டத்திட்டம் எதுவும் இல்லை. சந்தித்ததனால் ஒரு பத்திரிகையாளர் அவர் பக்கம் சாய்ந்துவிடுவார் என்றும் சொல்வதற்கில்லை!
அப்படியிருக்க அதே ஹிந்து குடும்பத்தைச் சேர்ந்த மாலினிக்கு சகோதர உறவுள்ள என்.ராம், மாலினி மீது மறைமுகமாக பாய்ந்திருக்கிறார். கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் அது அவருக்கு கௌரவம் சேர்த்திருக்கும்.
ஹிந்துவின் 142 வருட கால பாரம்பர்யத்தை மாலினி அடகு வைத்துவிட்டார் என்பது போல் எழுதியிருக்கிறார். இது தவறு, தவறு, கண்டிக்கப்படக்கூடிய தவறு.
ஜெயலலிதா தன் கட்சித் தொண்டர்கள் யாரும் எதிரிகளைப் பார்க்கக்கூடாது என்று உத்தரவு இட்டிருந்தார். அது போன்ற ஒரு உத்தரவை ராம் விதித்திருக்கிறாரோ என்னவோ?! அரசியலில் தான் நாகரிகம் இல்லை; பத்திரிகைத் துறையில் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் நாகரிகத்தையும் கெடுத்துவிட வேண்டுமா?!
இந்த விவகாரத்தில் நான் மாலினி பார்த்தசாரதியை முற்றிலுமாக ஆதரிக்கிறேன். அவர் சொல்வது போல் 142 வருட பாரம்பர்யத்தை உருவாக்கியவர்கள் ஹிந்துவில் நிருபர்களாக இருந்தவர்கள் என்னையும் சேர்த்து… ஒருதலைச் சார்புள்ள செய்திகள் வெளிவந்ததெல்லாம் ராம் பொறுப்பேற்ற பிறகுதான்!
அந்தக் காலத்தில் ராஜ் என்று அழைக்கப்பட்ட ஆடிட்டர் ராஜகோபால் என்னை சிலருக்கு அறிமுகப்படுத்தும் போது, Meet Mr. Natarajan Assistant Editor, The Muslim என்று அறிமுகப் படுத்துவார். அந்த அளவிற்கு ஹிந்துக்கள் ஹிந்துவின் வாசகர் வட்டத்தில் இருந்து வெளியேறியதற்கு முக்கியக் காரணம் என்.ராம்.
இவர் இன்று பிரதமருடன் மாலினியின் சாதாரண சந்திப்பை சித்தாந்த ரீதியாக விமர்சிப்பது சற்றும் பொருந்தாதது. ஒரே குடும்பத்தினர், ஒரே பத்திரிகை குடும்பத்தினர் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் கொட்டுவதைத்தான் Washing the dirty linen in public என்கிறோம்.
‘தி ஹிந்து’வும் இதைச் செய்ய வேண்டுமா?